வாரத்தில் 6 நாள் முட்டை: மது பங்காரப்பா தகவல்
வாரத்தில் 6 நாள் முட்டை: மது பங்காரப்பா தகவல்
வாரத்தில் 6 நாள் முட்டை: மது பங்காரப்பா தகவல்
ADDED : ஜூலை 12, 2024 07:03 AM

ஷிவமொகா: ''கர்நாடகாவின் பள்ளி மாணவர்களுக்கு, இனி வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.
இது அவர்களின் கல்வித்திறனை அதிகமாக்கும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாதெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஷிவமொகாவின் அம்பேத்கர் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 2022 - 23ல் எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. 2023 - 24ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.,யில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில், அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இம்முறை ஷிவமொகா மாவட்டம், எஸ்.எஸ்.எல்.சி.,யில் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. இந்த சாதனையை ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.
தேர்வுகளில் காப்பி அடிப்பது உட்பட எந்த முறைகேடும் நடக்காமல் ஒழுங்காக தேர்வு நடத்தப்பட்டது.
மாநிலத்தில் 50,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. குறுகிய காலத்தில் 45,000 கவுரவ ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முட்டை வழங்கப்பட்டது. இனி 10ம் வகுப்பு வரை வழங்கப்படும். இதற்கு முன் வாரம் இரண்டு நாட்கள், முட்டை வழங்கப்பட்டது. இனி ஆறு நாட்களும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.