உத்தரகண்டில் மலையேறிய 18 பேர்: மோசமான வானிலையால் 4 பேர் பலி
உத்தரகண்டில் மலையேறிய 18 பேர்: மோசமான வானிலையால் 4 பேர் பலி
உத்தரகண்டில் மலையேறிய 18 பேர்: மோசமான வானிலையால் 4 பேர் பலி
ADDED : ஜூன் 06, 2024 12:13 AM

பெங்களூரு: உத்தரகண்ட் சஹஸ்தரதாலில் மலையேற்றம் சென்ற 22 பேரில், மோசமான வானிலை காரணமாக, கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்; அவர்களை மீட்டு வர கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சஹஸ்தரதால் மலைப்பகுதி அமைந்துள்ளது. இது, 13,451 அடி உயரம் உடையது. இங்கு, சுற்றுலா பயணியர் மலையேற்றத்துக்காக வருவர்.
இதன்படி, 'ஹிமாலயன் வியூ டிரெக்கிங் ஏஜென்சி' வாயிலாக, கர்நாடகாவின் 18 பேரும், மஹாராஷ்டிராவின் ஒருவரும், மூன்று வழிகாட்டிகளும் என மொத்தம் 22 பேர், மே 29ம் தேதி மலையேறினர். ஜூன் 7ம் தேதி மீண்டும் முகாமுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
ஜூன் 3ம் தேதி முகாமுக்கு திரும்பும் வழியில், திடீரென வானிலை மாறியது. கடும் பனி மூட்டத்தில் சிக்கி, 15 பேர் வழி தவறி, மலையின் 'குர்பி' என்ற பகுதிக்கு சென்று விட்டனர். மற்றவர்கள் முகாமுக்கு திரும்பினர்.
மலையேற்றக் குழுவினர் ஆபத்தில் இருப்பதாக, நேற்று முன்தினம் இரவு உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஹெலிகாப்டர் வாயிலாக, 15 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆயினும், நான்கு பேர் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, கர்நாடக வருவாய் துறை முதன்மை செயலர் ராஷ்மி மகேஷ் கூறுகையில், ''மோசமான வானிலை காரணமாக, மலையேறியவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் விபரம் குறித்து இன்னும் தெரியவில்லை. மீட்கப்பட்டவர்களிடம் விபரம் கேட்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
சுற்றுலா பயணியரை மீட்டு வருவதற்காக, கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, உடனடியாக பெங்களூரில் இருந்து டேராடூனுக்கு புறப்பட்டு சென்றார்.