Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தினர் கைது

சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தினர் கைது

சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தினர் கைது

சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தினர் கைது

ADDED : ஜூலை 01, 2024 12:31 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அகர்தலா: உரிய பயண ஆவணங்களின்றி சட்டவிரோதமாக நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 11 பேரை, அகர்தலா ரயில் நிலையத்தில் திரிபுரா போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இதன் அருகே நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் நம் நாட்டு எல்லைக்குள் நுழைவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இதை தடுக்கும் நோக்கில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக சர்வதேச எல்லையை கடந்து, ரயில் வாயிலாக நம் நாட்டின் எல்லைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அகர்தலா ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் கும்பலாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களின் உடைமைகளை பரிசோதித்ததில், உரிய பயண ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக சென்னை, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us