
இவ பந்தைய புறா.... பாடலால் புது அங்கீகாரம்: ஸ்ரீ கவுரி பிரியா
ஜூன் 09, 2024
Advertisement
வெப் பிலிம்கள் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி இருப்பவர் ஐதராபாத்தை சேர்ந்த பட்டதாரி ஸ்ரீ கவுரி பிரியா. "இவ பந்தைய புறா" பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இவர் கூறியதாவது: என் குடும்பத்தில் நானும் அப்பாவும் தான். ஒரே பொண்ணு என்பதால் அப்பா என்மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்துள்ளார். பள்ளிப்படிப்பின் போதே கிளாசிக்கல் மியூசிக் கற்று கொண்டிருந்தேன். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவேன். ஐதராபாத்தில் கல்லுாரி படிப்பின் போது, 2018ல் அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் ஐதராபாத் விருதை வாங்கினேன். இது புதிய வாழ்க்கை பயணத்தை தந்தது. ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை.
எல்லோரையும் போல கொரோனா வந்து என்னை வீட்டிலேயே முடக்கியது. என்றாலும் சும்மா இருக்கவில்லை. தெலுங்கில் ரைட்டர் பத்ம பூஷன், மெயில் எனும் வெப் பிலிம்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றேன். அடுத்து "மேட்" எனும் தெலுங்கு வெப் பிலிமில் நடித்தேன். இது ஒரு கல்லுாரியில் படிக்கும் நண்பர்களுடனான கதை என்பதால் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.
இப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த வேளையில் தமிழில் "மாடர்ன் லவ் சென்னை"எனும் வெப்சிரிஸ்-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் "லாலாகுண்ட பொம்மை" எபிசோடில் "இவ பந்தய புறா" என்ற பாட்டு வரும். அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதனால் புது அங்கீகாரம் கிடைத்தது.
தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என நம்பவே இல்லை. எங்காவது வெளியில் சென்றால் கூட என்னை அடையாளம் கண்டுபிடித்து பாசம் காட்டுகின்றனர்.
புதிய சொந்தம் கிடைத்தது போல இருந்தது. அதன்பின் நடிகர் மணிகண்டனுடன் ஹீரோயினாக "லவ்வர்" படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அதிக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்.
"லவ்வர்"படப்பிடிப்பில் எனக்கு தமிழ் அதிகம் பேச வராமல் இருந்தது. மணிகண்டன், இயக்குநர்கள் உதவி செய்ததை மறக்க முடியாத நினைவாக கருதுகிறேன் என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!