ADDED : ஜன 31, 2024 12:14 AM

புதுடில்லி:தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 26.70 சதவீதம் அதிகரித்து, 2.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், இறக்குமதி 2.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த 2023 டிசம்பரில், தங்கத்தின் இறக்குமதி 157 சதவீதம் உயர்ந்து 24,900 கோடி ரூபாயாக இருந்தது.
நாட்டின் தங்கம் இறக்குமதியில், கிட்டத்தட்ட 41 சதவீத பங்குடன் மிகப் பெரிய ஆதாரமாக சுவிட்சர்லாந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 13 சதவீதமும், தென்னாப்ரிக்கா 10 சதவீத பங்களிப்பையும் வழங்குகின்றன. நாட்டின் மொத்த இறக்குமதியில், தங்கம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. தற்போது, தங்கத்திற்கான இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
தங்கத்தின் இறக்குமதி அதிகரித்த போதிலும், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், 15.61 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 17.62 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலகட்டத்தில், ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 16.16 சதவீதம் குறைந்து, 2.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.