Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ADDED : ஜூன் 23, 2025 12:37 AM


Google News
Latest Tamil News

ஜூன் காலாண்டில் சென்னையில் வீடு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு


நாட்டின் ஒன்பது முக்கிய நகரங்களில் தேவை குறைவின் காரணமாக, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வீடு விற்பனை எண்ணிக்கை 19 சதவீதம் சரிந்து, 94,864 ஆக இருக்கும் என, ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஈவிட்டி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,16,432 ஆக இருந்தது.

இருப்பினும், மதிப்பீட்டு காலாண்டில் சென்னையில் வீடுகள் விற்பனை எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 5,354 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 4,927 ஆக இருந்தது. கடந்த 2021 செப்டம்பர் காலாண்டுக்குப் பின், வீடு விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு கீழ் சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையம் அமைக்க என்.எல்.சி.,யுடன் ஒப்பந்தம்


என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.எல்.சி., புதுபிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், தமிழகத்தில் மூன்று தனித்தனி பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் எனப்படும் பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையங்களை அமைக்க, தமிழக பசுமை எரிசக்தி கழகத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் இந்த சேமிப்பு மையங்கள், துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் மற்றும் துாத்துக்குடி மாவட்டம் கயத்தார் துணைமின் நிலையங்களில் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம், என்.எல்.சி., இந்தியா குழுமத்தால் மேற்கொள்ளப்படும், முதல் பெரிய அளவிலான பேட்டரி எரிசக்தி சேமிப்பு திட்டமாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் இ.பி.எப்.ஓ., உறுப்பினர்கள் எண்ணிக்கை 19.14 லட்சமாக உயர்வு


இ.பி.எப்.ஓ., கடந்த ஏப்ரலில் 19.14 லட்சம் நிகர உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இ.பி.எப்.ஓ., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 19.14 லட்சம் நிகர உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது. இது முந்தைய மாதமான மார்ச் எண்ணிக்கையைக் காட்டிலும் 31.31 சதவீதம் அதிகம். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1.17 சதவீதம் அதிகரிப்பாகும்.

கடந்த ஏப்ரலில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 8.49 லட்சம் பேர் புதிய சந்தாதாரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாதமான மார்ச்சை விட 12.49 சதவீதம் அதிகம்.

டிஜிட்டல் கட்டண மோசடிகளை தடுக்கவிரைவில் பொது உள்கட்டமைப்பு தளம்


டிஜிட்டல் கட்டண மோசடிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகள் வேகம் எடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, வங்கி மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், முந்தைய நிதியாண்டில் 12,230 கோடி ரூபாயாக இருந்த மோசடி மதிப்பு, கடந்த நிதியாண்டில் 36,014 கோடி ரூபாயாக, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் டி.பி.ஐ.பி., எனும் டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தளமாக உருவாக்கிட, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுடன் மத்திய அரசும், ரிசர்வ் வங்கி யும் ஆலோசனை நடத்தி வருகின்றன. டிஜிட்டல் மோசடி முக்கிய பிரச்னைகளுள் ஒன்றாக இது இருப்பதால், அடுத்த சில மாதங்களில் இத்தளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us