ADDED : ஜன 07, 2024 01:21 AM

புதுடில்லி:வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல், வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு, இ - இன்வாய்ஸ் எனும் மின்னணு விலைப்பட்டியல் தகவல்களை இணைக்காமல், 'இ - வே' பில்களை வழங்க முடியாது என, தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.
ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் உள்ள வணிகங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறையின் படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ - வே பில் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேசிய தகவல் மையம் தெரிவித்து உள்ளதாவது:
இ - இன்வாய்சுக்கு தகுதியான வரி செலுத்துவோர் கூட, வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளுக்கு, இ - இன்வாய்ஸ் இணைக்காமல் இ - வே பில்களை வழங்குகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல், இந்த இரு பரிவர்த்தனைகளுக்கும் இ - இன்வாய்ஸ் இல்லாமல் இ - வே பில் வழங்க அனுமதி வழங்கப்படாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.