நகரமயமாக்கலால் இடம்பெயரும் நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை
நகரமயமாக்கலால் இடம்பெயரும் நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை
நகரமயமாக்கலால் இடம்பெயரும் நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 01:45 AM

சென்னை:சென்னை உட்பட முக்கிய நகரங்களில் செயல்படும் சிறு தொழில் நிறுவனங்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, வேறு இடங்களுக்கு மாற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இடம் மாறும் நிறுவனங்களுக்கு, சிறிய அளவிலான மனைகள் கொண்ட தொழிற்பேட்டைகளை அமைத்துத் தருமாறு, தமிழக அரசுக்கு தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நகரங்கள் விரிவடைந்து வருவதால், சிறு நிறுவனங்கள் பல இடர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இடநெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.
புகார்
இதனால் அவை வேறு இடங்களுக்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கான மாற்று இடங்கள் கிடைப்பதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:
சென்னையை பொறுத்தவரை, நகரமயமாக்கலால் கிண்டி, பல்வாரம், குன்றத்துார் போன்ற இடங்களில் உள்ள சிறு நிறுவனங்கள், வேறு இடங்களுக்கு தொழிலை மாற்ற வேண்டி உள்ளது. அப்படி மாற்றவில்லை எனில், ஒலி மாசு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல புகார்கள் எழுப்பப்படுகின்றன.
அப்படியே இடம் மாறுவதென்றாலும், அதற்கு ஏற்ப தொழிற்பேட்டைகளில் மனைகள் இல்லை. கிண்டியில், 50 ஆண்டுகளுக்கு முன், 700 சதுர அடியில் தொழில்மனைகள் வழங்கப்பட்டன.
தற்போது, சிட்கோ தொழிற்பேட்டையில், ஒரு நிறுவனத்திற்கு குறைந்தது, இரண்டு கிரவுண்ட் மனைகள் வழங்கப்படுகின்றன. இந்த மனை, குறு, சிறு நிறுவனங்களுக்கு அதிகளவாகும்.
வாழ்வாதாரம்
எனவே, இடம்பெயரக் கூடிய நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு நிறுவனத்திற்கு, 1,500 சதுர அடி அளவிலான மனை வழங்கும் வகையில், புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். இதனால், பல நுாறு தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள், தங்களுக்கென தனி தொழிற்பேட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது; குறைந்த சதுர அடியில் மனை ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.