ADDED : ஜூலை 24, 2024 11:51 PM

சென்னை:''கடந்த 10 ஆண்டுகளில், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 200 சதவீதமும்; வருமான வரி வசூல், 300 சதவீதமும் உயர்ந்துள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
சென்னையில், 165வது வருமான வரி தின விழா நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
வருமான வரி, நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 200 சதவீதமும்; வருமான வரி வசூல், 300 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சிறந்த நிர்வாகம்.
போதிய வசதிகள் இல்லாததால், வருமான வரி செலுத்த வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது; அது இப்போது மாறிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளில், எண்ணற்ற மாற்றங்கள் மக்களின் வாழ்வில் நடந்துள்ளன. குறைந்த எண்ணிக்கையில் இருந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், இன்று அதீத வளர்ச்சியை பெற்றுள்ளன.
சுதந்திரத்திற்குப்பின் உலக பொருளாதாரத்தில், 6வது இடத்தில் இருந்தோம். 2014ல், 11வது இடத்திற்கு சென்றோம். தற்போது, மீண்டும் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். பல துறைகளில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திரம் பெற்ற பிறகும், வரி செலுத்துபவர்களை சந்தேகத்துடன் பார்க்கும் வழக்கம் இருந்தது.
இன்று அந்த நிலை இல்லை. வருமான வரி வசூலிப்பவர்கள், நாட்டிற்கு சிறந்த சேவையை செய்து வருகின்றனர்; தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். வருமான வரித்துறை, வரி வசூல் செய்வது மட்டுமின்றி, தேசத்தின் கட்டமைப்பில் பெரும்பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்துார், வருமான வரி இயக்குனர் ஜெனரல் கிருஷ்ண முராரி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.--