/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கட்டட கழிவுகளை அகற்றுவதில் மோசடி நிர்வகிப்பு கட்டணம் கட்டாமல் 'டிமிக்கி' கட்டட கழிவுகளை அகற்றுவதில் மோசடி நிர்வகிப்பு கட்டணம் கட்டாமல் 'டிமிக்கி'
கட்டட கழிவுகளை அகற்றுவதில் மோசடி நிர்வகிப்பு கட்டணம் கட்டாமல் 'டிமிக்கி'
கட்டட கழிவுகளை அகற்றுவதில் மோசடி நிர்வகிப்பு கட்டணம் கட்டாமல் 'டிமிக்கி'
கட்டட கழிவுகளை அகற்றுவதில் மோசடி நிர்வகிப்பு கட்டணம் கட்டாமல் 'டிமிக்கி'
ADDED : ஜூன் 12, 2025 11:02 PM
பெங்களூரு: கட்டடங்களில் உருவாகும் கழிவுகளை, தாங்களே அறிவியல் ரீதியில் அழிப்பதாக அறிவித்துக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களின் உரிமையாளர்கள், மாநகராட்சி குப்பை வாகனங்களில், கழிவுகளை கொட்டுகின்றனர். திடக்கழிவு நிர்வகிப்புக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சி, நடப்பாண்டில் இருந்து பொது மக்களிடம் திடக்கழிவு நிர்வகிப்புக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது.
ஏப்ரல் முதல் கட்டணம் வசூலிக்க துவங்கியது. கட்டடத்தின் பரப்பளவு, அங்குள்ள செயல்பாடுகளின் அடிப்படையில், குப்பை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியுடன் திடக்கழிவு நிர்வகிப்பு கட்டணம் செலுத்த வேண்டும். வீடுகள், வர்த்தக கட்டடங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்துக்கும் திடக்கழிவு நிர்வகிப்பு கட்டணம் செலுத்துவது கட்டாயம்.
நகரில் 100க்கும் மேற்பட்ட பிளாட்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், 50,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவுள்ள கட்டடங்கள், தினமும் 100 கிலோவுக்கும் அதிகமான கழிவு உருவாகும் கட்டடங்கள், கழிவுகளை தாங்களே அறிவியல் ரீதியில் அழிக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இக்கட்டங்கள், மாநகராட்சி குப்பை வாகனங்களில் கழிவுகளை கொட்டக் கூடாது. அப்படி செய்தால் திடக்கழிவு நிர்வகிப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
கட்டணம் செலுத்துவதில் இருந்து டிமிக்கி கொடுக்க விரும்பிய வர்த்தக கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட் உரிமையாளர்கள், கழிவை தாங்களாகவே அழித்து கொள்வதாக அறிவித்தன. மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்துவதில்லை.
ஆனால், பெரும்பாலான கட்டட உரிமையாளர்கள் தங்கள் கழிவுகளை, மாநகராட்சி குப்பை வாகனங்களிலேயே கொட்டுகின்றனர்.
இவற்றை கண்டுபிடிப்பது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இரண்டு மடங்கு கட்டணம்
அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களின் உரிமையாளர்கள், தாங்களே கழிவுகளை அப்புறப்படுத்துவதாக அறிவித்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தில் கழிவுகளை கொட்டுகின்றனர். இவர்களை கண்டுபிடித்து இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். கழிவுகளை தாங்களே அகற்றுவதாக அறிவித்துக் கொண்ட கட்டடங்களின் பட்டியலை வைத்து கொண்டு, ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும்.
- லோகேஷ்,
திடக்கழிவு பிரிவு அதிகாரி