Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி சதவீதம் குறைவு கல்வித்துறை அதிகாரிகள் மீது முதல்வர் அதிருப்தி

எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி சதவீதம் குறைவு கல்வித்துறை அதிகாரிகள் மீது முதல்வர் அதிருப்தி

எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி சதவீதம் குறைவு கல்வித்துறை அதிகாரிகள் மீது முதல்வர் அதிருப்தி

எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி சதவீதம் குறைவு கல்வித்துறை அதிகாரிகள் மீது முதல்வர் அதிருப்தி

ADDED : ஜூன் 01, 2025 06:50 AM


Google News
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின், கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்கும்படி, அரசு தலைமை செயலருக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

பெங்களூரின் விதான்சவுதாவில், மாநில முன்னேற்றம் குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். முதலில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து, அவர் ஆய்வு செய்தார்.

இதில் முதல்வர் பேசியதாவது:

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். அவர்கள் அளிக்கும் பதில், திருப்தியாக இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

காரணம் வேண்டாம்


எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்வு சதவீதம் குறைந்ததற்கு, ஆசிரியர் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை என, காரணம் கூறாதீர்கள். தட்சிண கன்னடா உட்பட சில மாவட்டங்களில் மட்டுமே, தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள, மாவட்ட பொறுப்பு செயலர்கள் பள்ளிகளுக்கு சென்று, ஆசிரியர்கள் அக்கறையுடன் பணியாற்றுகின்றனரா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அதை செய்யாமல், தேவையற்ற காரணங்களை கூறாதீர்கள். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால், அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

'விவேகா' திட்டத்தின் கீழ், பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட, நிதி வழங்க தாமதம் செய்யக்கூடாது. நிதி வழங்கியும் பள்ளி வகுப்பறைகள் கட்டாததற்கு காரணம் என்ன?

அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுடன், ஆசிரியர்கள், அதிகாரிகள் பேச வேண்டும். சிறார்கள் பள்ளியை விடுவதை தவிர்க்க, என்னென்ன செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்கின்றனரா, இல்லையா என்பதை, பொறுப்பு செயலர்கள் கவனிக்க வேண்டும்.

நல்லது அல்ல


ஆண்டுக்கு ஆண்டு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது நல்லது அல்ல. அரசு பள்ளி மாணவர்களுக்கு, பால், முட்டை, ராகி மால்ட், தங்கும் விடுதி என, அனைத்து சலுகைகளை வழங்கியும், மாணவர்கள் சேர்க்கை குறைவது ஏன்? இதற்கு தீர்வு காணுங்கள்.

விளையும் பயிர், முளையில் தெரியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவதை விட்டு விட்டு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். சி.இ.ஓ.,க்கள், கட்டாயமாக மாணவர்களின் பெற்றோருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

கல்யாண கர்நாடகா, ஹைதராபாத் - கர்நாடகா மாவட்டங்களில், அதிகாரிகள் கூடுதல் கவனம் காட்டுங்கள். தேர்ச்சி சதவீதம் குறைவானதற்கு, எனக்கு காரணங்கள் தேவையில்லை. தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதே முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us