Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி

கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி

கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி

கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி

ADDED : மார் 25, 2025 02:22 AM


Google News
ராஜ்யசபாவில் நேற்று அலுவல்கள் துவங்கியதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். அப்போது, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசியதாவது:

காங்கிரசைச் சேர்ந்த மிக முக்கியமான பொறுப்பில் உள்ளவர், அதுவும் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ள ஒருவர், அரசியலமைப்பு சட்டத்தை திருத்தப் போவதாகவும், அதன் வாயிலாக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பேச்சு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

வாக்குவாதம்


இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை காக்க வந்தவர்கள். அதற்காகத்தான் நாடு முழுதும் ஒற்றுமை யாத்திரையை நடத்தினோம். ஆனால் நீங்களோ, இந்தியாவை உடைப்பதற்கு விரும்புகிறீர்கள்,” என்றார்.

அதற்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு, “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க போவதாக கூறுவதன் வாயிலாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை சீரழிக்கப் பார்க்கிறீர்கள்.

''உங்களுக்கு தைரியம் இருந்தால், இன்றைக்கே உங்களது கர்நாடக துணை முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்,” என்றார்.

அப்போது, சபை முன்னவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா பேசியதாவது:

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இது, அம்பேத்கர் அளித்த அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு மிகவும் முரணானது.

கர்நாடகாவில், ஒப்பந்தங்களை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக மத அடிப்படையில் 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டது. இது போன்ற சட்டங்களையும், கொள்கைகளையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சபை ஒத்திவைப்பு


அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படவே, சபையில் அமளி அதிகரித்தது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவிலும், காலையில் கேள்வி நேரம் துவங்குவதற்கு முன்பாகவே, இதே பிரச்னை வெடித்தது. கர்நாடகாவில் முஸ்லிம் சமூகத்துக்கு பொது ஒப்பந்தங்கள் வழங்குவதில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் கூறியிருப்பதை கண்டித்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.

ஆளுங்கட்சி எம்.பி.,க்களே சபையின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வந்து குரல் எழுப்பி கூச்சலிட்டனர். இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் தரப்பிலிருந்தும் குரல்கள் கிளம்பவே, சபை ஒத்திவைக்கப்பட்டது.

மதியத்துக்கு மேல் ராஜ்யசபா மீண்டும் கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று, கர்நாடகா துணை முதல்வர் ஒருபோதும் கூறவில்லை.

''காரணம், அரசியலமைப்பு சட்டத்தை எப்போதுமே காத்து வந்துள்ள கட்சி காங்கிரஸ். இனியும் அதே வழியில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் காவலாளியாக காங்கிரஸ் செயல்படும்,” என்றார்.

இதையடுத்து அமளி அதிகமானதால், சபை ஒத்திவைக்கப்பட்டது.

இனி 'அரக்கு' காபி

உலகப்புகழ் பெற்ற அரக்கு காபியை எம்.பி.,க்கள் அனைவரும் சுவைக்கும் வகையில், பார்லிமென்ட் கேன்டீன் வளாகத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று, இந்த காபி ஷாப் திறக்கும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிரண் ரிஜிஜு, பியுஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் ராமமோகன் நாயுடு, “அரக்கு காபி, ஆந்திராவின் அரக்கு மலை பள்ளத்தாக்குகளில் விளையக்கூடியது. இந்த காபி செடிகளை, பல 100 ஆண்டுளாக, அந்த பகுதியில் உள்ள அரக்கு என்று அழைக்கப்படும் பழங்குடியின விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். மிகவும் தனித்த சுவை கொண்ட இந்த காபி, ஆந்திராவைத் தாண்டி தற்போது உலகப்புகழ் பெற்ற காபியாக மாறியுள்ளது,” என்றார்.



சிவகுமார் மறுப்பு

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நேற்று பெங்களூரில் கூறியதாவது:அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று, நான் எங்கும் கூறவில்லை. 'அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது. அதில் நாங்கள் மாற்றங்களை செய்வோம்' என்றுதான் கூறினேன்.ஆனால், நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று பேசியதாக, பா.ஜ., பொய் சொல்கிறது. அரசியலமைப்பை பாதுகாப்பது எங்கள் கட்சியின் பிறப்புரிமை. இதை வைத்து பா.ஜ., விளையாடி வருகிறது. நட்டாவை விட, நான் விவேகமான அரசியல்வாதி; 36 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். தேசிய கட்சியான எங்களுக்கு அரசியலமைப்பு என்னவென்று தெரியும். என்னை பற்றி தவறாக பிரசாரம் செய்தால், நட்டா மீது புகார் அளிப்பேன். எனக்கு அடிப்படை பொது அறிவு உள்ளது. போலி செய்தியை உருவாக்குவதில் பா.ஜ.,வினர் நிபுணர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us