Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை

பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை

பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை

பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை

ADDED : ஜூன் 26, 2025 07:05 AM


Google News
பெங்களூரு : 'அன்னபாக்யா' திட்டத்தில், கூடுதலாக வழங்கப்படும் அரிசிக்கு மாற்றாக, ஏழை குடும்பத்தினருக்கு, ஊட்டச்சத்தான பொருட்கள் அடங்கிய, 'இந்திரா கிட்'கள் வழங்க, உணவுத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, உணவுத்துறை வெளியிட்ட அறிக்கை:

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 'அன்னபாக்யா' திட்டம் செயல்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள, ஏழை குடும்பத்தினருக்கு மாதந்தோறும் இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு ஐந்து கிலோ அரிசி வழங்குகிறது.

மாநில அரசு சார்பில் ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கான தொகையும் வழங்கப்படுகிறது. சில குடும்பத்தினருக்கு, தேவைக்கும் அதிகமான அரிசி கிடைக்கிறது. இவர்கள் கூடுதல் அரிசியை கள்ளச்சந்தையில் விற்று பணமாக்குகின்றனர்.

அரிசி தவறாக பயன்படுவதை தவிர்க்கும் நோக்கில், கூடுதல் அரிசிக்கு மாற்றாக ஊட்டச்சத்து பொருட்கள் கொண்ட, 'கிட்'கள் வழங்க, மாநில அரசு ஆலோசிக்கிறது. தற்போது ஒரு கிலோ அரிசி விநியோகிக்க, போக்குவரத்து செலவு உட்பட, 25.50 ரூபாய் செலவாகிறது. அரிசிக்கு மட்டுமே மாதந்தோறும், 573 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6,876 கோடி ரூபாய் செலவாகிறது.

மாநில அரசு நடத்திய ஆய்வில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள், கூடுதல் அரிசி அல்லது பணத்துக்கு பதிலாக, மாற்றுப் பொருட்களை பெற விரும்புவது தெரிந்தது. இதன்படி அரிசிக்கு மாற்றாக 'இந்திரா கிட்'கள் வழங்க, உணவுத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த கிட்களில் 2 கிலோ கோதுமை, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ உப்பு, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 100 கிராம் டீ துாள், 50 கிராம் காபி துாள் இருக்கும்.

தற்போதைய புள்ளி விபரங்களின் படி, கர்நாடகாவில் 1.28 கோடி பி.பி.எல்., குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும், கிட் வழங்க, தலா 400 ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அரிசி தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தலாம். பயனாளிகளுக்கும் உதவியாக இருக்கும்.

நியாய விலைக் கடைகள் மூலம், ஆதார் லிங்க் செய்யப்பட்ட பயனாளிகளை அடையாளம் கண்டு, கிட்கள் வழங்கப்படும். திட்டம் சோதனை முறையில், சில முக்கியமான மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மக்களின் வரவேற்பை தெரிந்து, மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும்.

கிட்களுக்கு தேவையான பொருட்கள், மாநில அரசின் உணவு தானியங்கள் விநியோக கார்ப்பரேஷன் அல்லது ஒப்பந்தம் செய்துள்ள தனியார் ஏஜன்சிகளிடம் கொள்முதல் செய்யப்படும்.

'இந்திரா கிட்'கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய சில மாதங்களுக்கு பின் எப்படி செயல்படுகிறது என்பதை, தனியார் நிறுவனம் மூலமாக, ஆய்வு செய்யப்படும்.

இது உணவுத்துறையின் திட்டமாகும். ஜூலை 2ம் தேதி, சிக்கபல்லாபூரின் நந்தி மலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது திட்டத்தை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற உணவுத்துறை தயாராகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us