Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நிறைவு!

நிறைவு!

நிறைவு!

நிறைவு!

PUBLISHED ON : ஏப் 28, 2024


Google News
Latest Tamil News
ஒரு ஊரில் இருந்த மகாராஜா, ரொம்ப நல்லவர்; தரும சிந்தனை உள்ளவர். எல்லாருக்கும் எல்லா உதவியும் செய்வார். யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார்.

ஒருசமயம், அவர், பெரிய காட்சி சாலையைத் திறந்து, அதில், யார் வேண்டுமானாலும் வந்து, எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் இலவசமாக எடுத்து போகலாம் என, ஏற்பாடு செய்தார்.

இந்தக் காட்சி சாலைக்கு, ஆண் - பெண் என, நிறைய பேர் வந்து, அவர்களுக்கு வேண்டியதை எடுத்து போயினர்.

சில பேர் அவங்களுக்கு தேவையான வேட்டி - சட்டைகளையும், அங்கேயிருந்த விலை உயர்ந்த நகைகளையும், நல்ல புத்தகங்களையும் எடுத்து சென்றனர்.

இரும்பு பெட்டிகளை எடுத்து போயினர், சிலர்.

அனைவரும் முழு மனநிறைவுடன் திரும்பினர்.

அங்கே வந்த, வயதான அம்மா மட்டும், எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மனநிறைவும் இல்லை. அனைவரும் ஆச்சரியமாக அந்தம்மாவை பார்த்தனர்.

'உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே...' என்றனர்.

'இங்கே இருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் திருப்தியளிக்கவே இல்லை. நான் மகாராஜாவை பார்க்கணும்...' என்றார்.

ஓடிப்போய் மகாராஜாவிடம் சொன்னார், அங்கே இருந்த திவான்.

உடனே, யானை மேலே ஏறி, அந்த அம்மாவை பார்க்க வந்தார், மகாராஜா.

'மகாராஜா, கீழே இறங்கி வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பற்றி உங்களிடம் பேசணும்...' என்றார், அந்த அம்மா.

யானை மீதிருந்து கீழே இறங்கினார், மகாராஜா.

மகாராஜாவின் வலது கையை பிடித்து, 'மகாராஜா, இப்ப நீங்க எனக்கு சொந்தமாயிட்டீங்க. காட்சிச் சாலையிலே உள்ள சின்னச் சின்ன பொருட்களையும், விளையாட்டுப் பொம்மைகளையும் நான் விரும்பலே.

'உங்களை பெறவே நான் விரும்புகிறேன். நீங்க எனக்கு சொந்தமாகி விட்டதால், இந்த ராஜ்ஜியத்தின் செல்வம் எல்லாம் இப்ப எனக்கு சொந்தமாகி விட்டது...' என்றார், அந்த அம்மா.

மலைத்து போய் நின்னார், மகாராஜா.

அந்த அம்மாவை கடைசி வரைக்கும் தன் அரண்மனையிலேயே வைத்து, தாய் மாதிரி கவனித்துக் கொண்டார், மகாராஜா.

நமக்கு பலவிதமான ஆசைகள். அதனால், அந்தந்த ஆசைக்குரிய பொருட்களைத் தேடி செல்கிறோம். இப்படிச் செய்வதால் திருப்தியே உண்டாவதில்லை.

ஆசைக்கு அடிமையாகிறவர்கள், பிச்சைக்காரர்களுக்கும் பிச்சைக்காரர்களாக ஆகிவிடுகின்றனர்.

'உலக இச்சைகளையும், பொருள்களையும் துறந்து, இப்பரந்த பிரபஞ்சத்தின் மூலம் பரம்பொருளைப் பெற்று விட்டால், உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தியாகிவிடும்...' என்கிறார், சுவாமி சிவானந்தர்.

ஞானமுள்ள அந்த வயதான அம்மா, மகாராஜாவை சொந்தமாகப் பாராட்டி, அவருடைய செல்வத்துக்கெல்லாம் அதிபதியானாரோ, அப்படியே எல்லா சவுகரியங்களும் உங்களைத் தேடி வரும் என்கிறார்.

இந்த காலத்தில், அது மாதிரி பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

பி. என். பி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us