Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
பார்த்திபன் செய்த சாதனை!

இரவின் நிழல் படத்தை அடுத்து, தற்போது, 13 சிறுவர்-, சிறுமியரை வைத்து, டீன்ஸ் என்ற பெயரில் படத்தை இயக்கி உள்ளார், பார்த்திபன்.

பொதுவாக, திரைப்படங்களின் இசை விழா, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நடக்கும். இந்நிலையில், பார்த்திபனோ, இந்த படத்தின் இசை விழாவை, காலை, 9:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 வரை, மொத்தம் 10 மணி நேரம் நடத்தினார்.

இதனால், உலக சாதனையாளர் சங்கம், இந்த படத்திற்கு, ஒரே நாளில், ஒரே இடத்தில் அதிகப்படியான நேரம் இசை விழா நடத்தியதற்காக, சிறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.

சினிமா பொன்னையா

நயன்தாரா கட்டிய, கனவு மாளிகை!

திரைப்படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, பெண்களின் அழகு சாதன பொருட்கள் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களையும் செய்து வருகிறார், நயன்தாரா.

இந்த நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்காக, சென்னையில், தன் வீடு அமைந்துள்ள மொட்டை மாடியில், முழுவதும் கண்ணாடிகளால் ஆன மாளிகை வடிவில் அலுவலகம் ஒன்றை கட்டியிருக்கிறார்.

'பல மாயாஜால தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இது, என் நீண்ட நாளைய கனவு அலுவலகம்...' என்கிறார், நயன்தாரா.

 எலீசா

'பான் இந்தியா' படத்தில், ராஷ்மிகா மந்தனா!

கன்னட நடிகையான, ராஷ்மிகா மந்தனா, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, ஹிந்தி சினிமா வரை அழுத்தமாக கால் பதித்து விட்டார். தற்போது அவர் நடிக்கும், தி கேர்ள் பிரண்ட் என்ற படம், ஐந்து மொழிகளில், பான் இந்தியா படமாக உருவாகிறது.

இந்த படத்திற்காக, ஐந்து மொழிகளிலும், 'டப்பிங்' பேசுகிறார், ராஷ்மிகா மந்தனா. தாய்மொழியிலேயே பல நடிகையர், தங்களுக்கு தாங்களே, 'டப்பிங்' பேசாத நிலையில், இப்படி பல மொழிகளிலும், ராஷ்மிகா, 'டப்பிங்' பேசுவதை, ஆச்சர்யமாக பார்க்கின்றனர், திரை உலகினர்.

 எலீசா

நான்கு நடிகர்களை குறி வைக்கும், ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய் நடிப்பில், துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர், ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து, விஜயை வைத்து படம் இயக்க இருந்தபோது, கதை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையால், கிடப்பில் போடப்பட்டது.

அதனால், சில ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த, ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

'இந்த படத்தில் வேற்று மொழி நடிகர்களையும் நடிக்க வைத்து, பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்பதற்காக, மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, சிவராஜ் குமார் போன்ற நடிகர்களிடமும், முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க, பேச்சு நடத்தி வருகிறேன்...' என்கிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* தாரா நடிகை பாணியில், நானும் பாலிவுட்டில் கொடி நாட்டப் போகிறேன் என்று, புயலாக புறப்பட்டு சென்றார், மலையாள வாரிசு நடிகை. அவர் நடித்த அந்த படத்தில், 'டூ பீஸ் கெட் - அப்'பில் களத்தில் இறக்கி விட்டதோடு, கெட்ட ஆட்டமும் போட வைத்து விட்டனர்.

அதோடு, அப்படத்தில் நடிக்கும், 'ஹீரோ'வோ, அடிக்கடி அம்மணியை, 'டேட்டிங்'கிற்கு அழைத்தும், 'டார்ச்சர்' கொடுக்கிறார். இதனால், வெறுத்துப் போன நடிகை, பாலிவுட் கலாசாரம், நமக்கு சரிவராது என்று முடிவெடுத்து, இந்த ஒரு படத்தோடு பாலிவுட்டுக்கு, 'டாடா' காட்டவும் முடிவெடுத்துள்ளார்.

* நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் கோலிவுட்டில், 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ளார், கரகாட்ட நடிகர். எம்.ஜி.ஆர்., பாணியில், சரக்கு, 'தம்' அடிக்கும் காட்சிகள் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார்; அதுபோன்ற காட்சிகளுடன் தன்னை தேடி வந்த சில படங்களை ஓரங்கட்டியும் வருகிறார்.

ஆனால், இரண்டாவது சுற்றிலும் கரகாட்ட நடிகர், இப்படி கறாராக பேசி வருவதால், அவரிடம் கதை சொல்லி திரும்பிய இயக்குனர்கள், 'சூப்பர் ஸ்டாரே இதுபோன்ற காட்சிகளில் தயங்காமல் நடிக்கும் போது, இவர் என்ன, அவரை விட பெரிய நடிகரா?' என்று, மேற்படி நடிகரை விமர்சித்து வருகின்றனர்.

சினி துளிகள்!

* ஸ்ரீதேவியின் மூத்த மகளான நடிகை, ஜான்வி கபூர், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர், சுசில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரை காதலிக்கிறார். இந்த காதலுக்கு, ஜான்வி கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான, போனி கபூர், 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார்.

* லோகேஷ் கனகராஜ் இயக்கும், தன், 171வது படத்தில், தங்க கடத்தல் மன்னனாக, 'நெகட்டிவ் ரோலில்' நடிக்கிறார், ரஜினி.

* ஹிந்தியில், வருண் தவானுக்கு ஜோடியாக, பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ். இப்படம், தமிழில், விஜய் நடிப்பில் வெளியான, தெறி படத்தின், 'ரீ - மேக்' ஆகும்.

* பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சாமானியன் என்ற படத்தில், மீண்டும், 'ஹீரோ'வாக நடித்திருக்கிறார், ராமராஜன்.

* 'கோட் படத்தின் கிளைமாக்ஸ், ரசிகர்களை, 'சீட்' நுனியில் உட்கார வைக்க வேண்டும். அந்த அளவுக்கு காட்சி எடுங்கள்...' என்று, இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு, உத்தரவு போட்டுள்ளார், விஜய்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us