Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை

திண்ணை

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
முனைவர் சி.பழனியப்பன் எழுதிய, 'விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' நுாலிலிருந்து:

ஒருநாள், வீதியில், விவேகானந்தர் சென்று கொண்டிருந்தபோது, குரங்கு கூட்டம் ஒன்று, அவரை பின் தொடர்ந்தது.

குரங்குகளிடமிருந்து தப்பிச் செல்ல, விரைந்து சென்றார். ஆனால், அவைகளும் வேகமாக அவரை பின் தொடர்ந்தன. கடைசியில் அக்குரங்குகள், அவரை நெருங்கி சூழ்ந்து, தாக்கும் நிலைக்கு வந்தன.

அச்சமயம் அவ்வழியே சென்று கொண்டிருந்த, சன்னியாசி, 'ஓடாதே, விலங்குகளை எதிர்த்து நில்...' என்று கூறியது, விவேகானந்தர் செவிகளில் விழுந்தது.

அக்கணமே மருள் நீங்கப் பெற்று, மெய்யுணர்வுடன் எதிர்த்து நின்றார், விவேகானந்தர்.

அதைக் கண்ட அக்குரங்குகள் அனைத்தும், அஞ்சி திகைத்து, நாலாபக்கமும் சிதறி ஓடின. அதிலிருந்து பெரிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டார், விவேகானந்தர்.

தாம் கற்றதை உலகிற்கு, 'விலங்கை மட்டுமல்ல, விலங்குத் தன்மை வாய்ந்தவற்றையும், மருளச் செய்கின்றவற்றையும், மயக்கம் உண்டாக்குவதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும்; அஞ்சி ஓடலாகாது, எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்...' என்று உபதேசித்தார்.

    

ஒருமுறை, ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு, விவேகானந்தருக்கு, சீட்டு வாங்கிக் கொடுத்திருந்தார், பிரபு ஒருவர். ஆகையால், இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.

பெட்டி, படுக்கை, உணவின்றி, விவேகானந்தர், பயணம் செய்தது, அங்கிருந்த இரண்டு ஆங்கிலேயர்களுக்கு வியப்பூட்டியது.

இரந்து உண்ணும் பக்கிரி ஒருவனுக்கு, தாங்கள் பேசும் ஆங்கில மொழி எவ்வாறு தெரியும் என்றெண்ணிய ஆங்கிலேயர் இருவரும், விவேகானந்தரை பற்றி பரிகாசமாக பேசிய படி வந்தனர்.

ஒன்றும் தெரியாதவர் போல், அமைதியாக இருந்து, அந்த ஆங்கிலேயர்கள் பேசியதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார், விவேகானந்தர்.

ரயில் நெடுந்துாரம் சென்ற பின், ஓரிடத்தில் நின்றபோது, ஸ்டேஷன் மாஸ்டரிடம், 'குடிப்பதற்கு தண்ணீர் எங்கு கிடைக்கும்...' என்று ஆங்கிலத்தில் கேட்டார், விவேகானந்தர்.

அதைக் கேட்டதும், ஆங்கிலேயர்கள் இருவரும் வியப்படைந்தனர்.

விவேகானந்தரிடம், 'ஓ... உமக்கு ஆங்கிலம் தெரிகிறதே. நாங்கள் பரிகாசம் பண்ணினதை நீர் ஏன் தடுக்கவில்லை...' என்றனர்.

'அன்பர்களே, நான் மூர்க்கர்களை காண்பது இது முதல் முறையல்ல...' என்று பதிலளித்தார், விவேகானந்தர்.

    

இளைஞர்களே... தேச முன்னேற்றம் எனும் தேர் சக்கரத்தை நகர்த்த, உங்கள் தோள்களை கொடுங்கள். என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது.

இவை, வீரத்துறவி, விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்.

 - நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us