Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/சுற்றுச்சூழல் திருவிழா!

சுற்றுச்சூழல் திருவிழா!

சுற்றுச்சூழல் திருவிழா!

சுற்றுச்சூழல் திருவிழா!

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
பழையன கழிதல் புதியன புகுதல். இது தான் போகி எனும், லோகிரி திருநாளின் தத்துவம். பழையன என்றால், வீட்டில் இருக்கிற பழைய துணி, ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் ஆகியவை அல்ல. இவை, குப்பைக்கு போக வேண்டியவை.

போகியன்று, எதை எரிக்க வேண்டும் என்பதை, வட மாநிலத்தவர்களிடம் தான், நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை எரிப்பதால், நமக்கு சூரியன் மற்றும் அக்னிதேவனின் அருள் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது.

மகர சங்கராந்திக்கு முந்தைய நாளை, சில மாநிலங்களில், போகி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். வடமாநிலத்தவர்களும், சீக்கியர்களும் இந்த விழாவை, 'லோகிரி' என்பர். லோகிரி எனும் சொல்லுக்கு புதிதாக்குதல் என, பொருள்.

வடமாநிலங்களில் லோகிரி திருநாளை, மிக விமரிசையாகக் கொண்டாடுவர். இந்த திருவிழாவின் கதாநாயகர்கள் சூரியனும், அக்னியும் தான். சூரியன், லோகிரிக்கு மறுநாளான, மகர சங்கராந்தியன்று, தன் வடக்கு நோக்கிய பயணத்தை துவக்குகிறார். இதிலிருந்து ஆறு மாதங்கள், அதாவது, ஆனி கடைசி நாள் வரை, இந்த பயணம் தொடரும்.

இந்த காலம் மிக சுபமானது. ஆறு மாதமும் தொடர்ந்து முகூர்த்த மாதங்கள். இதன் துவக்க மாதமான தை முதல் நாள், வெப்பத்தை சீராகத் தந்து, பயிர்களும், உயிர்களும் இவ்வுலகில் நல்லபடியாக வாழ அருள் செய்த சூரியனுக்கும், அவர் தந்த விளைபொருட்களை வேக வைத்து சுவையாக சாப்பிட உதவிய, நெருப்பு கடவுளான அக்னிக்கும் நன்றி கூறுகிறோம்.

அப்படியானால், நாம் அவர்களுக்கு காணிக்கை அளிக்க வேண்டாமா!

இதற்கு, தரமான விறகுகளை குவித்து, நெருப்பு மூட்ட வேண்டும். இதில், எள், வேர்க்கடலை மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்பு பண்டமான கஜாக் எனும் டில் சாக்ரி, (டில் என்றால் எள், சாக்ரி என்றால் சர்க்கரை) பாப்கார்ன் எனப்படும் சோளப்பொறி, வேக வைத்த அரிசி (பப்டு ரைஸ்) உள்ளிட்டவற்றை இடுவர்.

சூரிய பகவானிடம், 'இந்த காணிக்கையை ஏற்று, எங்களுக்கு தேவையான அளவு வெப்பத்தையும், குளுமை மற்றும் மாலையில் மறைந்து ஓய்வுக்கு வசதியாக இருளையும் தர வேண்டும். இந்த உலகத்திற்கு, தட்பவெப்ப மாறுபாட்டால் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்...' என, வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் வட மாநிலத்தவர் செய்கின்றனர்.

நெருப்பு மூட்டி, இந்த பொருட்களை இட்டு, மேள தாளங்களுடன் நெருப்பை சுற்றி நடனமாடுவர், வண்ண ஆடைகள் அணிந்த பெண்கள். இந்த பொருட்களால், சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் கிடையாது.

தமிழக மக்கள், ஒரு காலத்தில் மண்பாண்டங்களை பயன்படுத்தினர். இவற்றில், பழைய பாத்திரங்களை குப்பையில் போடுவர். மண்ணிலிருந்து வந்தது மண்ணில் மறைந்தது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், இப்போது கண்டதையும் போட்டு எரித்து, சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றனர்.

போகி என்பது, ஒரு வகை யாகம். இந்த யாக குண்டத்தில் போடும் பொருட்கள் கடவுளைச் சென்று சேர வேண்டும். இனியேனும், போகியின் உண்மை தன்மையைப் புரிந்து, அதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருவிழாவாகக் கொண்டாடுவோம்.     

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us