Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/தெய்வ நாமத்தின் சிறப்பு !

தெய்வ நாமத்தின் சிறப்பு !

தெய்வ நாமத்தின் சிறப்பு !

தெய்வ நாமத்தின் சிறப்பு !

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
ஒருமுறை, விஷ்ணு பகவானிடம் சென்று, 'அனைத்துலகின் பிதாவே! பக்தர் மந்திரமாகக் கருதி ஓதும் உங்கள் பெயரில் உள்ள சிறப்பு என்ன?' எனக் கேட்டார், நாரத மகரிஷி.

'உயிர் வாழும் எந்தப் பிராணியிடமேனும் சென்று, 'நாராயணா' என்ற நாமத்தை கூறு. அதன் பின் விளைவைப் பார்...' என்றார், கடவுள்.

விஷ்ணு பகவான் கூறியபடி, பூலோகம் வந்தார், நாரதர். ஒரு புழுவைக் கண்டு, பகவான் நாமத்தை பலமுறை உச்சரித்தார்.

அப்புழு உடனே உயிர் விட்டது.

நாரதர் வருந்தி, முன்னோக்கிச் சென்றார். அதன் பின், ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தார். அதனிடம் சென்று, நாராயண மந்திரத்தை இருமுறை கூறினார்.

வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.

அப்போது பிறந்த மானிடம் சென்று, 'நாராயண' நாமத்தைக் கூற, அதுவும் உயிர் நீத்தது.

மகாவிஷ்ணுவிடம் சென்று நடந்தவற்றை கூறினார், நாரதர்.

'இறைவா! புழு மடிந்தது. வண்ணத்துப் பூச்சியும் உயிர் விட்டது. மானும் மாண்டது. இனி என்னால் ஏதுமறியாத உயிர்களை அழிக்கும் பாவம் செய்ய முடியாது. 'நாராயண' மந்திரத்திலுள்ள மேன்மையை நீயே வெளிப்படுத்து...' என, வேண்டினார்.

'இறுதியாக ஒருமுறை இதையே செய். அங்கு ஒரு கன்று, தாயுடன் உள்ளது. அதன் காதில் நாராயண மந்திரத்தைக் கூறுவாயாக...' என்றார், விஷ்ணு.

இறைவன் கட்டளையை ஏற்றார், நாரதர்.

நாராயண மந்திரத்தை கேட்டதும் கன்றும் உயிர் துறந்தது.

'மகரிஷி! இதுதான் கடைசி முறை, வாராணசி அரசருக்கு இப்போது தான் ஒரு மகன் பிறந்துள்ளான். அங்கு சென்று இந்த மந்திரத்தை கூறு...' என்றார், மகாவிஷ்ணு.

நாரதர் அங்கு சென்றதும், மிக்க பக்தியுடன் வரவேற்றார், அரசர்.

'எனக்கு மகன் பிறந்த இந்த நல்ல நேரத்தில், நீங்கள் வந்திருப்பது, நான் செய்த பாக்கியம். அவனை வாழ்த்துங்கள்...' என்றார், அரசர்.

'நாராயணா... நாராயணா... நாராயணா...' என, நாரதர் கூறியதும், குழந்தைப் பேச துவங்கியது.

'மகரிஷியே! நாராயண நாமத்தின் மேன்மையை நீங்கள் அறிந்தீர்களா?' என, மேலும் பேசியது...

'நான், புழுவாக இருந்தேன். புனிதமான இறைவன் நாமத்தைக் கேட்டதும் இறந்து, வண்ணத்துப் பூச்சியானேன். அதன் பின், மானாகவும், கன்றாகவும் பிறப்பெடுத்தேன்.

'இப்போது, மானுடப் பிறவி எடுத்து, அரசனின் மகனானேன். புனிதமான நாராயண நாமத்தின் மகிமையால் தான், இவையெல்லாம் நடந்தன...' என்றது, அந்த குழந்தை.

தெய்வ நாமத்தை உச்சரிப்பது ஒன்றே, மானிடராய் பிறந்த நாம், முக்தி பெற எளிய வழியாகும்!

அருண் ராமதாசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us