Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புறம் கூறாதே!

புறம் கூறாதே!

புறம் கூறாதே!

புறம் கூறாதே!

PUBLISHED ON : பிப் 10, 2024


Google News
Latest Tamil News
மதிய உணவு இடைவேளை. வகுப்பறையில், மாசிலாமணியும், பூபதியும் அமர்ந்திருந்தனர்.

பூபதியின் தந்தை அரசு ஊழியர். அடிக்கடி பணியிட மாற்றம் நிகழும். 10 நாட்களுக்கு முன் தான் இவ்வூருக்கு வந்திருந்தனர்.

பூடகமாக பேச்சை துவங்கினான் மாசிலாமணி. அவன் சொல்வதை புரியாமல் பார்த்தான் பூபதி.

''என்ன முழிக்கிறாய். வகுப்பில் நன்றாக படிக்கும் சிவக்கொழுந்து திமிரில், மிதப்பில் கத்துவான்...''

''ஓஹோ...''

''அடுத்து டேவிட். அவன் வீட்டில் தான், கணக்கு வாத்தியார் குடியிருக்கிறார். அதனால், அந்த பாடத்தில் எப்படியும் தப்பிச்சுடுவான்; மற்ற பாடங்களில் பெரிய வட்டம் தான் கிடைக்கும்...''

''ம்...''

''அப்புறம் உயரமாக இருப்பானே கந்தவேல்... அவன் மகா முரடன். கையும் நீளம்; அவனிடம் எதுவும் வெச்சுக்காதே... வம்பிழுத்தாலும் ஒதுங்கி போய் விடு...''

''சரி...''

''மூன்றாவது வரிசையில், முக்கால்வாசி முட்டாள் மாணவர்கள் தான். கணக்கு தேர்வுக்கு, அறிவியல் பாடம் படித்து வருவர்; அவர்களிடம் சகவாசம் வெச்சுக்காதே...''

சிரித்தான் பூபதி. கூட சேர்ந்து சிரித்தான் மாசிலாமணி.

''கடைசி பெஞ்சு மாணவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பை புறக்கணித்து, ஊர் சுத்த கிளம்பி விடுவர்...''

''ஓஹோ... அதனால், என்னிடம் மட்டும் பழகுன்னு சொல்ல வருகிறாயா...''

கேட்டான் பூபதி.

''நீ புத்திசாலி...''

பூபதியின் தோளில் நட்புடன் கை போட முயன்றான் மாசிலாமணி.

நாசூக்காக விலக்கியவாறு, ''உன் போன்ற ஆட்கள் கூட பழகுவது தான் மிகப் பெரிய ஆபத்து...'' என்றான் பூபதி.

''நல்வழி காட்ட வந்த என் பேச்சை தவறாக எடுத்திருக்கிறாய்...''

''உடன் படிக்கும் மாணவர்கள் பற்றி குறை கூறிய நீ... என்னை பற்றியும், இப்படி தானே பிறரிடம் பேசுவாய். உன் இயல்பு குறை கூறுவது. சொல்லும்படியாக யாரிடமும், ஒரு நல்ல விஷயம் இல்லையா... முரடன் சக்திவேல் சிறந்த கபடி வீரனாமே... மூன்றாவது பெஞ்ச் முத்துக்குமார் பேச்சுப் போட்டியில கலக்குவானாமே... கடைசி வரிசை கார்த்திகேயன் அருமையாக பாடுவானாமே... உன் கண்ணுக்கு, இம்மாதிரி நல்ல விஷயமெல்லாம் தெரியலையா...''

தலை குனிந்தான் மாசிலாமணி.

''நல்லதை சிந்தித்து, செயல்படுவோர் கூட இருந்தால் போதும். உன் மாதிரி குறை கூறுவோரிடமிருந்து விலகி தான் நிற்பேன்...''

உறுதியாகவும், தடாலடியாகவும் எடுத்துரைத்தான் பூபதி.

பதில் பேச முடியாமல் நகர்ந்தான் மாசிலாமணி.

பட்டூஸ்... புறம் பேசுவதை தவிர்த்து, எல்லாரிடமும் அன்பை பகிர்வோம்.

நித்யா நாகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us