Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ இன்ஜினியர் இடமாறுதலை அமல்படுத்தாத அதிகாரி!

இன்ஜினியர் இடமாறுதலை அமல்படுத்தாத அதிகாரி!

இன்ஜினியர் இடமாறுதலை அமல்படுத்தாத அதிகாரி!

இன்ஜினியர் இடமாறுதலை அமல்படுத்தாத அதிகாரி!

PUBLISHED ON : ஜூன் 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''முன்னாள் அமைச்சருக்கு, 'செக்' வச்சிருக்காரு பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''அ.தி.மு.க.,வுக்கு கிடைச்ச ரெண்டு ராஜ்ய சபா எம்.பி., பதவிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு தராத அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியை, கட்சியினர் பாராட்டுறாங்க... ஏற்கனவே, ராஜ்யசபா எம்.பி.,யான, முன்னாள் அமைச்சரான, விழுப்புரம் சி.வி.சண்முகத்துக்கும், பழனிசாமிக்கும் அடிக்கடி முட்டல் மோதல் வருதாம் பா...

''சண்முகமும் சட்டம் படிச்சவரு தான்... அவருக்கு செக் வைக்கவே, கட்சியின் வக்கீல் அணி செயலரான இன்பதுரையை, ராஜ்யசபாவுக்கு பழனிசாமி அனுப்பியிருக்காரு... அதுவும் இல்லாம, 'எனக்கு சட்டம் சொல்லி தந்ததே, இன்பதுரை தான்'னு கட்சி நிர்வாகிகளிடமும் பழனிசாமி பெருமையா சொல்றாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''மூர்த்தியின் கீர்த்தியை பார்த்து, சீனியர்கள் அதிர்ச்சியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தி.மு.க.,வுல நேரு, பொன்முடி, வேலுன்னு பல சீனியர்கள் இருக்க, முதல் முறை அமைச்சரான மதுரை மூர்த்தியிடம், பொதுக்குழு நடத்தும் பொறுப்பை முதல்வர் கொடுத்தப்பவே, சீனியர்கள் பலரும் முணுமுணுத்திருக்கா ஓய்...

''மாநாடு, பொதுக்கூட்டம்னு எதா இருந்தாலும், அந்த சீனியர்கள் தான் பிரமாண்டமா நடத்திக்காட்டி, தலைமையை அசத்திண்டு இருந்தா... ஆனா, அவா எல்லாரும் வாயடைச்சு போற மாதிரி, பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்ட மாநாடு மாதிரி நடத்தி, மூர்த்தி சாதிச்சுட்டாரோல்லியோ...

''பொதுக்குழுவுல ஸ்டாலின் பேசுறச்சே, 'மதுரை மூர்த்தி போற்று தும், மதுரை மூர்த்தி போற்றுதும்'னு அவரை வானளாவ புகழ்ந்தும் தள்ளிட்டாரு... இதன் மூலமா, 'சீனியர்கள் பட்டியல்ல மூர்த்தியும் சேர்ந்துட்டார்'னு அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இடமாறுதல் உத்தரவை கண்டுக்கலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''திருநெல்வேலி மாநகராட்சியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,000 கோடி ரூபாய்ல நிறைய திட்ட பணிகள் செய்தாங்க... இதுல, நிறைய ஊழல்களும் நடந்துச்சுங்க...

''மாநகராட்சி இன்ஜினியர் லெனின், வருமானத்துக்கு அதிகமா 3 கோடி ரூபாய்க்கு மேல சொத்து சேர்த்துட்டதா, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கே பதிவு பண்ணிட்டாங்க... இப்ப, அவரை துாத்துக்குடி மாநகராட்சிக்கு மாத்தியிருக்காங்க...

''இதே மாதிரி, மாநகராட்சி உதவி இன்ஜினியர்களான பழனியை, கன்னியாகுமரி நகராட்சிக்கும், பிலிப் அந்தோணியை நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கும் டிரான்ஸ்பர் பண்ணி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராசு சமீபத்துல உத்தரவு போட்டாருங்க...

''இதுல பழனி, உடனே கன்னியாகுமரிக்கு போயிட்டாரு... ஆனா, பிலிப் அந்தோணி மட்டும், நெல்லையிலயே பணியில நீடிக்கிறாருங்க...

''மாநகராட்சி முக்கிய அதிகாரி, தனது சில செயல்பாடுகளுக்காக பிலிப் அந்தோணியை, 'ரிலீவ்' பண்ணாம வச்சிருக்காரு... 'அவரது இடமாறுதலை ரத்து பண்ணி, மீண்டும் நெல்லையிலயே பணியமர்த்தவும் முயற்சிகள் நடக்கு'ன்னும் மாநகராட்சி ஊழியர்களே பேசிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''சுகபுத்ரா தம்பி டீ சாப்பிடுங்க...'' என, நண்பரிடம் கூறிவிட்டு எழ, மற்றவர்களும் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us