Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சித்தா, ஆயுர்வேத துறைகளின் கீழ் கட்டண சிகிச்சைக்கு அரசு அனுமதி

சித்தா, ஆயுர்வேத துறைகளின் கீழ் கட்டண சிகிச்சைக்கு அரசு அனுமதி

சித்தா, ஆயுர்வேத துறைகளின் கீழ் கட்டண சிகிச்சைக்கு அரசு அனுமதி

சித்தா, ஆயுர்வேத துறைகளின் கீழ் கட்டண சிகிச்சைக்கு அரசு அனுமதி

PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM


Google News
சென்னை:இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளின் கீழ் கட்டண சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்துள்ள அரசாணை:

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இயற்கைக்கு புறம்பான வாழ்வியல் காரணமாக, பல்வேறு நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, கட்டண அடிப்படையில் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளிக்க, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்கள் இல்லை.

எனவே, செங்கல்பட்டு யோகா, இயற்கை மருத்துவ மையம் மற்றும் சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவ மைய வளாகத்தில் உள்ள, 'டாம்ப்கால்' தலைமையகத்தில், கட்டண சிகிச்சைப் பிரிவு துவங்கப்படும் என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

அதன்படி, செங்கல்பட்டு யோகா, இயற்கை மருத்துவ மையத்தில் உள்ள தனி அறைகளில், 14 அறைகளை சிறப்பு வகுப்பு, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் அறைகளாக மாற்றி, கட்டண வார்டுகளாக மாற்றப்பட உள்ளன. அதேபோல், சென்னை, 'டாம்ப்கால்' தலைமையகத்தில், இரு அறைகளை, சிறப்பு மருத்துவக் கண்காணிப்புக்கு வழங்க அனுமதி கோரப்பட்டது.

மேலும், யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய துறைகளின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனியாக குறைந்த அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும், 'ஏசி' மற்றும் 'ஹீட்டர்' சாதனம், சோபா, 'டிவி' வசதிகள் அமைக்கப்படவும் உள்ளது. இதற்கு அனுமதி அளித்து, அவற்றை செயல்படுத்த, 1.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 30 ரூபாய் முதல், 48,000 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படும். அறைகளுக்கு, 1,200 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us