PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர்நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கள்ளச்சாராய
உயிர் பலி நடந்தால், மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட
போலீஸ் நிலைய அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும்' என, முதல்வர்
கூறியுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், காவல் துறை நடவடிக்கைகளில்
தலையிட மாட்டர் என்ற உத்தரவாதத்தை உங்களால் அளிக்க முடியுமா? தலையிட்டால்
அதற்கான முழு பொறுப்பையும், தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
அப்படி எந்த பொறுப்பும் ஏத்துக்க கூடாதுன்னு தானே, அதிகாரிகளை பொறுப்பாக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கார்!
அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை: ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரிலும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கேள்விகள் எழுவதும், அதற்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாத வகையில், அமைச்சர் பதில் அளிப்பதும், தொடர் கதையாகி வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, அரசு தயாராக இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.
போற போக்குல, அரசு மாதாந்திர ஊதியம் கொடுப்பதே பெரிய விஷயமா இருக்கும் போது பழைய ஓய்வூதிய திட்டமெல்லாம் அவ்ளோ தான்!
இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் தமிழரசன் பேட்டி: கள்ளக்குறிச்சியில், அரசு ஆதரவோடு படுகொலை நடந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச கள்ளச்சாராய உயிர் இழப்பு இங்கு தான் நடந்து உள்ளது. மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்திற்கு பின், அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திஇருக்க வேண்டும்.
ஏற்படாமலா இருக்கு... 'டாஸ்மாக்' கடையில் குடிக்கிறசிலரது குடும்பத்தினர், 'கள்ளச்சாராயம் குடிச்சாலாச்சும் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்'னு கமென்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே!
தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கேரள மாநிலம், திருச்சூர் ஜில்லா, கருவண்ணுார் கூட்டுறவு சங்க வங்கியில், 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் வர்கீஸ் மீது அமலாக்க துறை வழக்கு தொடர்ந்துள்ளது. திருச்சூர் ஜில்லா மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. பரிசுத்தமான பொதுவுடமை கட்சியினர், 10 சென்டுக்கு, 60 லட்சம் ரூபாயை எட்டு வங்கி கணக்கில் மாற்றி, கடன் கொடுத்ததாக, போலியான ஆட்களை தயார் செய்து புதுமையாக லஞ்சம் பெற்ற வரலாறு நடந்திருக்கிறது.
எவ்ளோ நாளைக்கு தான் அவங்களும் உண்டியலை மட்டுமே குலுக்கிட்டு இருப்பாங்க!