/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அதிகாரிக்கு வேட்டு வைக்கும் லேடி ஆபீசர்ஸ்! அதிகாரிக்கு வேட்டு வைக்கும் லேடி ஆபீசர்ஸ்!
அதிகாரிக்கு வேட்டு வைக்கும் லேடி ஆபீசர்ஸ்!
அதிகாரிக்கு வேட்டு வைக்கும் லேடி ஆபீசர்ஸ்!
அதிகாரிக்கு வேட்டு வைக்கும் லேடி ஆபீசர்ஸ்!
PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''மட்டு, மருவாதி இல்லாம பேசுதாங்கல்லா...'' என்றபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வரும் மக்களிடம், போலீசார் அநாகரிகமா நடந்துக்கிடுதாவ... அதாவது, அதிகாரம் இருக்கிற பெரிய மனுஷங்களிடம் பணிவாகவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எரிஞ்சும் விழுதாவ வே...
''ஏற்கனவே, ஏதாவது பிரச்னையில சிக்கி, மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் புகார்தாரர்கள், போலீசாரின் தவறான அணுகுமுறையால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாயிடுதாவ... சில நேரங்கள்ல, போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு தரப்புக்கும் வாக்குவாதமே நடக்கு வே...
''சமீபத்துல கூட புகார் குடுக்க வந்த ஒரு பெண்ணை வாடி, போடின்னு பேசியதும் இல்லாம, ஒரு மூதாட்டியையும் தரக்குறைவா பேசியிருக்காவ... அடாவடி போலீசாருக்கு உயர் அதிகாரிகள் கடிவாளம் போடணும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''கண்துடைப்பு தான்னு சொல்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''அரசு துறைகள்ல நடக்கிற பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்க, 'விசாகா' கமிட்டி அமைச்சிருக்காங்க... மதுரை வணிக வரி துறையில், மூணு பாலியல் சீண்டல் புகார்களை விசாகா கமிட்டி விசாரிச்சு முடிச்சு ஒரு வருஷம் ஆகியும், நடவடிக்கை எடுக்காம இழுத்தடிக்கிறாங்க பா...
''இதனால, புகார் குடுத்தவங்க மன உளைச்சல்ல இருக்கிறதோட, புகார்ல சிக்கியவங்க சுதந்திரமா வலம் வர்றாங்க... இந்த தாமதத்தால வெறுத்து போன ஒரு பெண், சமீபத்துல தற்கொலை முடிவுக்கே போயிட்டாங்க பா...
''அப்புறமா, சுத்தி உள்ளவங்க அறிவுரையால மனசை மாத்திக்கிட்டு, வேற துறைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டாங்க... விசாகா கமிட்டி அறிக்கைப்படி, சமூக நலத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தும், எதுவும் நடக்காததால, 'கமிட்டியின் நோக்கமே நீர்த்து போயிடுச்சு'ன்னு ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சிறப்பா செயல்படற அதிகாரிக்கு வேட்டு வைக்க பாக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரிசர்வ் சைட்'கள் மீட்கப்பட்டிருக்கு... அங்க கட்டியிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிச்சு தள்ளிட்டா ஓய்...
''அதே மாதிரி, அனுமதியற்ற விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புகளை அதிரடியா அகற்றியிருக்கா... 'பிளான் அப்ரூவல்'ல யும் முன்ன மாதிரி பெரிய அளவுல புகார்கள் வரது குறைஞ்சிடுத்து ஓய்...
''டவுன் பிளானிங்கில் இருக்கிற முக்கிய அதிகாரி தான் இதுக்கு காரணம்... பணம், ஆளுங்கட்சியினர் பரிந்துரைன்னு எதையும் கண்டுக்காம, 40 வருஷமா ஆக்கிரமிப்புல இருந்த ரோட்டை, சமீபத்துல மீட்டிருக்கார் ஓய்...
''அதே நேரம், இவரால தங்களுக்கு வருமானம் பாதிக்கப்படறதால, சில அதிகாரி கள் இவர் மேல அதிருப்தியில இருக்கா... அதுலயும், ரெண்டு லேடி ஆபீசர்ஸ், இவரை மாத்தியே ஆகணும்னு, பெட்டிஷன் மேல பெட்டிஷனா போட்டுண்டு இருக்கா... 'தேர்தல் முடிவு வந்ததும், அவரை மாத்திடு வோம்'னு சபதமே போட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.