Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 80,000 திருக்குறள் புத்தகங்களை வழங்கி வருகிறேன்!

80,000 திருக்குறள் புத்தகங்களை வழங்கி வருகிறேன்!

80,000 திருக்குறள் புத்தகங்களை வழங்கி வருகிறேன்!

80,000 திருக்குறள் புத்தகங்களை வழங்கி வருகிறேன்!

PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, 'சர்வீஸ் டூ சொசைட்டி' என்ற அமைப்பு வாயிலாக பல்வேறு உதவிகளை செய்து வரும், ரவி சொக்கலிங்கம்: நான் பிறந்தது திருநெல்வேலி. படித்தது, வளர்ந்தது சென்னையில். ஆரம்பத்தில், ரயில்வேயில் பணிபுரிந்து வந்தேன்.

தற்போது துபாயில், கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய நினைத்தேன்.

அதற்கு காரணம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பலரும் அரசு பள்ளியில் தான் படித்து வருகின்றனர். அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும், அவர்களின் குடும்ப சூழல் காரணமாக, பாதியிலேயே அவர்களின் படிப்பு நின்று விடுகிறது.

கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளும் சமூகத்தில் உயர் பதவிக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்கு தரமான கல்வி அவசியம்.

இதனால், என் வருமானத்தில் ஒரு பகுதியையும், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியையும் பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன்.

சிறந்த ஆளுமைகளை பள்ளிகளுக்கு வரவழைத்து, அரசு பள்ளி மாணவர்களிடையே உரையாட வைக்கிறேன்; இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். தனியார் பள்ளி மாணவர்களின் தரத்திற்கு அவர்களும் உயர்வர்.

நாளடைவில், இது ஆலமரம் போல் விழுதுகள் பரப்பி, தற்போது 82 பெண் குழந்தைகள், 51 ஆண் குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவு; கல்லுாரி மாணவர்கள் 18 பேரின் படிப்பு செலவை ஏற்றுள்ளேன்.

மேலும், 138 பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கும், தமிழகம் தாண்டி, வெளி மாநிலங்களில் உள்ள 62 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்துள்ளேன்.

சில கல்லுாரிகளில் எனக்கு குறிப்பிட்ட சீட்கள் ஒதுக்கி தந்துள்ளனர். அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களை அக்கல்லுாரியில் சேர்த்து, படிப்பிற்கான செலவுகளை ஏற்று வருகிறேன்.

அரசு பள்ளி மாணவியருக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு உள்ளாடைகள், நாப்கின்கள் வழங்கும், 'கண்மணி' திட்டம், ஏழை கர்ப்பிணியருக்கு சத்துணவு வழங்கும், 'அம்மா' திட்டம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை பெறுவதற்காக, 'வாசகர் திட்டம்' போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறேன்.

கடந்த 2018 முதல் 74 பள்ளிகளில் காலை இணை உணவு திட்டமும், எங்கள் அமைப்பின் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், திருக்குறள் படிப்பதை ஊக்குவித்து வருவதுடன், 80,000 திருக்குறள் புத்தகங்களை மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி வருகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us