PUBLISHED ON : மே 15, 2026 12:49 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதல் சட்டசபை உரையிலேயே, கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருப்பது, அரசியல் ரீதியாக அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது. ஹிந்துக்களின் மீது அவர் தொடர்ந்து கல்லெறிவது கண்டனத்திற்குரியது. சட்டசபையில் பகிரப்பட்ட இந்த வெறுப்பு பிரசாரத்திற்கு, முதல்வர் விஜய் என்ன எதிர்வினையாற்ற போகிறார் என்பதை தான், தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.
கொள்கை ரீதியான விமர்சனம் என்பது ஆரோக்கியமானது; ஆனால், அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்த கூடாது. பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே நல்ல தலைமை பண்பு என்பதை, தேர்தலில் தோற்ற பிறகும் கூட உதயநிதி புரிந்து கொள்ளாதது ஏனோ?
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:
அ.தி.மு.க.,வை உடைப்பதற்கு சி.வி.சண்முகத்திற்கு காரணம் வேண்டும். அதற்காக தி.மு.க.,வை கைகாட்டிவிட்டு, அவரும் அவரது அணி எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறி உள்ளனர். தி.மு.க.,வை கை காட்டுவது திசைதிருப்பும் செயல்; அவர் எங்கள் மீது வீண்பழியை சுமத்துகிறார்.
வீண்பழி சுமத்துகிறார்னு சொல்றீங்க... இதுலருந்து என்ன தெரியுதுன்னா... 'தமிழக அரசியல்ல எது நடந்தாலும் அதுக்கு தி.மு.க., தான் காரணம்'ங்கிற அந்த கவுரவப் பட்டத்தை மட்டும் உங்ககிட்ட இருந்து யாராலயும் பறிக்க முடியாது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி:
தி.மு.க.,வோடு இணைந்து ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க., இல்லாமல் போய்விடும். தற்போது, அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். எனவே, புதிதாக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், த.வெ.க.,வை ஆதரிக்க அ.தி.மு.க., சட்டசபை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க-.,வோடு சேர்ந்தால் அ.தி.மு.க., இல்லாமல் போய்டும்னு பயப்படுறீங்க... ஆனா, முதல்வர் விஜயோடு சேர்ந்தால் அ.தி.மு.க-.,வே விஜயோட 'ரசிகர் மன்றமா' மாறிடாதுன்னு என்ன நிச்சயம்?
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். விஜய் அங்கு வந்த தகவல் அறிந்து, ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு மேடையில் நிற்க முடியாமல் விஜய் தவித்தார். பாதுகாப்பு அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகளை கலைத்து விஜயை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
காங்கிரஸ் கட்சி வளர இப்ப தான் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு... இனிமே காங்., போராட்டக் களத்துல விஜய் 'கட்- அவுட்' ஒண்ணு வைங்க, அப்புறம் பாருங்க... கூட்டத்தை அடக்க தனி மிலிட்டரியே தேவைப்படும்!
