PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணைச் செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: அமலாக்கத் துறையினர் தேடும் உதயநிதியின் நண்பரான
ரத்தீஷ் என்பவர், 2021ல் சாதாரண நபராகத்தான் இருந்தார்.
இப்படிப்பட்ட நபர், 'டாஸ்மாக்'கையே ஆட்டி படைத்தார். அதேபோல, 'டான்
பிக்சர்ஸ்' நிறுவனர் ஆகாஷ், முதல்வர் குடும்பத்திற்கு மிகவும்
நெருக்கமானவர்.
திடீரென, 1,000 கோடி ரூபாயில் பல படங்களை
எடுக்கிறார். அப்படி என்றால், இவருக்கு இந்த பணம் எப்படி வந்தது.
இந்த கேள்விகளுக்கு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள்
சரியான பாடத்தை தி.மு.க.,வுக்கு புகட்டுவர்.
முதல்வர் அடிக்கடி சொல்ற, 'எல்லாருக்கும் எல்லாம்'
என்பது, இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் போய் சேர்ந்திருக்குதோ?
ஒருவேளை இதை எல்லாம் பழனிசாமி செய்தாலும், அவற்றில் தி.மு.க., அரசு ஸ்டிக்கர் தான் ஒட்டும்!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேச்சு: கடந்த லோக்சபா தேர்தலில், 400 இடங்களில் வெல்ல வேண்டும் எனும் இலக்கோடுதான் பா.ஜ.,வினர் தேர்தலை சந்தித்தனர். இதையறிந்து, மக்கள் தனி பெரும்பான்மைக்கு குறைவாக கொடுத்தனர். தனி பெரும்பான்மை கொடுத்திருந்தால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றியிருப்பர்.
பா.ஜ., ஏற்கனவே தனி பெரும்பான்மையுடன் இருமுறை ஆட்சியில் இருந்தப்பவே, நினைத்திருந்தால் அரசியல்அமைப்பு சட்டத்தை மாற்றியிருக்குமே... இதெல்லாம் இவரது வீண் கற்பனை!
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: 'டாஸ்மாக்' விவகாரத்தில் சோதனை நடந்து விட்டாலே குற்றவாளியா? நீதிமன்றம் தீர்ப்பு சொல்லாமலே குற்றவாளி என எப்படி சொல்ல முடியும். அரசியல் நோக்கங்களுக்காக சோதனை நடத்தப்படுகிறது. 'டாஸ்மாக்' விவகாரத்தில் தவறு இருந்தால் தண்டனை கொடுங்கள்; அதை காங்கிரஸ் மறுக்கவில்லை. விசாரணை என்று சொல்லி, அதையே ஊழல் என்று சொல்வது என்ன அர்த்தம்.
'டாஸ்மாக்'கில் தவறே நடக்கலை என்றால், முதல்வரின் உறவினர் ஆகாஷும், உதயநிதியின் நண்பர் ரத்தீஷும் ஏன் தலைமறைவு ஆகணும்?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கா.லியாகத் அலிகான் பேட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால், எதிர்காலத்தில் நன்மை கிடைப்பது உண்மையென்றால், அதை ஏன் இப்போதே அ.தி.மு.க., செய்யக்கூடாது. மத்திய அரசிடம் வாதாடி, 'நீட்' தேர்வை ரத்து செய்ய முன்வரலாம். தேசிய கல்வி கொள்கையை விடுவித்து, இருமொழி கொள்கையை இங்கே கொண்டுவரச் செய்து, அதன் வாயிலாக வரவேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பெற்று தரலாம்.