PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு
வலு சேர்க்கும் வகையில், இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது. வருங்காலம் நல்ல
காலம்; வசந்த காலம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மீண்டும்
தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்று உறுதி ஏற்கும் வகையில், தேசிய
ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இப்படி நீங்க பா.ஜ.,வோட சேர்ந்து, அ.தி.மு.க., காலை வாரிவிட்டதுல, தி.மு.க.,வுக்கு தான் வசந்தகாலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி: புதிய கல்வி கொள்கையில், மத்திய அரசு காலை உணவு திட்டத்தை ஊக்குவித்து உள்ளது. இந்தியா முழுதும்இதை கொண்டு வர வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அதற்கான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்க தொடங்கி உள்ளது. புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு முழுமையாக நிறைவேற்ற தொடங்கினால், அதற்கான நிதி கிடைக்கும்.
'புதிய கல்வி கொள்கையை முழுமையாக நிறைவேற்றினால் தான் காலை உணவு திட்டத்துக்கு நிதி கிடைக்கும்' என, மறைமுகமாக நிபந்தனை விதிக்கிறாரோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வதால், இளைய மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 1.50 லட்சம் மருத்துவர்கள் உள்ள தமிழகத்தில், ஆண்டிற்கு புதிதாக 10,000த்திற்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் உருவாகியும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது எந்த வகையில் நியாயம்?
ஏதோ, மூத்த மருத்துவர்களின் அனுபவத்தை பயன்படுத்துறாங்கன்னு தப்பா நினைக்க வேணாம்... ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்க அரசு கஜானாவில் பைசா இல்லை என்பதே உண்மை!
அ.தி.மு.க., மருத்துவர் அணி மாநில துணை செயலர்டாக்டர் விஜயபாண்டியன் பேட்டி: சேலத்தில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை செய்யப்பட்ட சுவடு மறைவதற்கு முன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் இந்த அரசியல் கொலைகளால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த நிலையால் தமிழகத்தில் யாரும் தொழில் துவங்க முன்வர தயங்குகின்றனர்.
அரசியல் கொலைகளால் அரசியலுக்கு வரத்தானே பயப்படணும்... ஏன் தொழில் துவங்க தயங்கணும்னு புரியலையே!