PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தமிழகத்தில்
ஏழு ஆண்டுகளாக அரசு பல் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாததால், 64
பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. உடனடியாக
பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். அரசு
மருத்துவமனைகள் மட்டுமின்றி, கிராம மக்கள் பயன் பெறும் வகையில், அனைத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் மருத்துவர்களை நியமனம் செய்ய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'பல்லை கடிச்சிட்டு பொறுத்துக்கணும்'னு பேச்சு வழக்கில் சொல்ற மாதிரி தான், இவ்வளவு நாளா பல் மருத்துவர்கள் இருந்திருப்பாங்க போல!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ரேஷன் கடைகளில், முதியோர் தாங்கள் அங்கீகரித்த நபர் வழியே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதியை, திடீரென அரசு ரத்து செய்து, நேரில் வந்து பொருட்களை வாங்க வேண்டும் எனக் கூறி உள்ளது. இதனால் முதியோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதற்கு பதிலா முதியோர் பட்டியலை எடுத்து, அவங்க வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை அனுப்பி வைத்தால், முதல்வரை மனதார பாராட்டலாம்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பெரு விபத்து நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எப்போதும் ஆதரவாகத் தான் செயல்படும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, ஒப்பந்ததாரருக்கும், அரசு துறைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பின், ஆண்டுதோறும் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், கட்டண வசூல் அதிகரிக்கும் நிலையில், சுங்க கட்டணம் குறைய வேண்டுமே தவிர, அதிகப்படுத்துவதற்கான அவசியம் எப்படி வரும்?
நல்ல கேள்வி... சுங்க கட்டணம் வசூலிக்க துவங்கியதில் இருந்தே வருஷா வருஷம் ஏத்திட்டு தான் இருக்காங்க... அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது இந்த கேள்வியை கேட்க மறந்தது ஏனோ?