PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: தவறான
சித்தாந்தங்கள் இருந்தாலும், சீமான் பெற்ற ஓட்டுகளுக்கு வாழ்த்துகள்.
விஜயகாந்த் மகன் விஜய பிராபகரன் தோல்வி குறித்த புகாருக்கு, அவர்
வேண்டுமென்றால் சட்டரீதியாக வழக்கு தொடுக்கலாம்.
விருதுநகரில்
மாணிக்கம் தாகூரின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்தால், அந்த தொகுதியை
இவருக்கு விட்டு தர மறுத்த அவரை பழிவாங்கிய மாதிரி ஆகும்னு விஜய பிரபாகரனை
துாண்டி விடுறாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் கடந்த தேர்தலை விட கூடி உள்ளது. அதே சமயம் தி.மு.க.,வுக்கு 7 சதவீதம் அளவுக்கு, ஓட்டு சதவீதம் குறைந்திருக்கிறது. லோக்சபாவுக்கு உறுப்பினர்களை அ.தி.மு.க.,வால் அனுப்ப முடியவில்லை என்றாலும், உயர்ந்து வரும் ஓட்டு சதவீதம், 2026ம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க உதவும்.
ஜனநாயகத்துல எண்ணங்களை விட, எண்ணிக்கை தான் முக்கியம் என்பது, மூத்த அரசியல் வாதியான இவருக்கு தெரியாதா?
-தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: நடுரோட்டில் ஒரு ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அண்ணாமலை மீது, தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள கொலை வெறியை வெளிப்படுத்துகிறது. தி.மு.க.,வினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்டோரை, தமிழக காவல் துறை கைது செய்ய வேண்டும்.
இறைச்சி கடைகள்ல கூட ஆடுகளை வெட்ட கூடாது என்றுதான் ஆட்டு தொட்டி அமைத்து உள்ளனர்... அப்படியிருக்க, நடுரோட்டில் ஆட்டை வெட்டிய வர்களை சும்மா விடவே கூடாது!
தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி வைத்தியநாதன் பேச்சு: லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்; பழனிசாமி தலைமையை அகற்ற வேண்டும் என்கிற எதார்த்த உண்மையை தமிழகத்திற்கு உணர்த்தி இருக்கிறது. பிரிந்திருக்கிற அ.தி.மு.க.,வினர் ஒருங்கிணையவும் இதுதான் சரியான தருணம் என, தொண்டர்கள் கருதுகின்றனர். அ.தி.மு.க.,வை மீட்க ஜெயலலிதா நினைவிடத்தில், மவுன தியானம் நடத்த வேண்டும்.
ஏற்கனவே, அங்க தியானம் பண்ணியதன் பலனை தான் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இன்று அனுபவிச்சிட்டு இருக்காங்க!