PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

திருப்பூரில் நடந்த, புதிய பஸ்கள் துவக்க விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்றனர். பஸ்களுக்கு பச்சை கொடி காட்ட, மேடையில் இருந்து அமைச்சர்கள் நடந்து சென்ற போது, கட்சியினர் திரண்டு, அமைச்சர்கள் அருகில் வந்தனர்.
போட்டோ, வீடியோகிராபர்கள், 'சார், இங்க திரும்புங்க; இப்படி பாருங்க; கொஞ்சம் தள்ளுங்க' என, சொல்லிக் கொண்டிருக்க, நெரிசலால் அசவுகரியமான சூழல் ஏற்பட்டது.
இதை கவனித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், 'சொன்னா தள்ளி நில்லுங்களேன்பா' என்றார், கட்சியினரை பார்த்து. கட்சியினர் நகராமல் நிற்கவே, கோபமான அவர், 'ஏம்பா, சொன்னா கேட்கவே மாட்டேங்கிறீங்க... புது பஸ் பேப்பர்ல வரணும்லோ... மத்தவுங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி நின்னா எப்படி...' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'இவங்க வசதிக்கு வேணும்னா கூட்டத்தை கூட்டுறாங்க; வேணாம்னா தள்ளி போக சொல்றாங்க; இதெல்லாம் என்ன நியாயம்...' என, புலம்பியபடி புறப்பட்டார்.