PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

ஜூலை 14, 1956
மதுரையில், சேஷாத்திரி - ராதா தம்பதியின் மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் சந்திரசேகர். மதுரை மருத்துவக் கல்லுாரியில் 14 தங்கப் பதக்கங்களுடன் எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், சண்டிகரில் எம்.டி., பொது மருத்துவம், செரிமானம், 'எண்டோஸ்கோபி' துறைகளில் சிறப்பு பட்டம் பெற்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், செரிமானவியல் துறையை துவக்கினார். அங்கு, 23,000 எண்டோஸ்கோபி மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். உடல் பருமன், கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
பார்வை, கேட்பு திறனற்ற மாணவர்களுக்காக சுகாதாரம் மற்றும் சாலை விதிகள் பற்றிய தகவல்களை, 'பிரெய்லி' வடிவில் வெளியிட்டுள்ளார். மருத்துவ சேவைகளுக்காக, நாட்டின் உயரிய விருதான, பத்மஸ்ரீ மற்றும் மாஸ்டர் கிரிஸ்டல், ஹிப்போகிரேட்டஸ் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் நிரந்தர கவுரவ பேராசிரியராக, இளம் டாக்டர்களுக்கு வழிகாட்டுகிறார். இவரது 68வது பிறந்த தினம் இன்று!