Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ யார் முடிவெடுக்க வேண்டும்?

யார் முடிவெடுக்க வேண்டும்?

யார் முடிவெடுக்க வேண்டும்?

யார் முடிவெடுக்க வேண்டும்?

PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., க்கள், அரசியல் சாசன சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்த பின்னரே பதவியேற்கின்றனர். அப்படியென்றால், மத்திய அரசால் பார்லிமென்ட் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை உறுப்பினர்கள் மதித்து நடக்க வேண்டும் என்பது தானே முறை!



கல்விக் கொள்கையில், மத்திய - மாநில அரசு இரண்டுக்குமே அதிகாரம் தரப்பட்டு, அதற்கான பிரிவுகளில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மும்மொழிக் கொள்கை, அவ்வகையில் நாடு முழுதுக்கும் ஒன்றானதே!

பா.ஜ., ஆளாத மாநிலங்கள் கூட இக்கொள்கையை ஏற்றிருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே அதை ஏற்க மறுத்து, நிதியையும் இழந்து தவிக்கிறது.

மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை, ஓர் அரசியல் கட்சி எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

துண்டு சீட்டு வைத்து, தாய் மொழியில் உரையாற்றும் அமைச்சர்களுக்கு, மாணவர்கள் எந்த மொழியை பயில வேண்டும், பயிலக் கூடாது என்பதில் முடிவெடுக்கும் திறன் உள்ளதா?

ஓட்டுக்கு காசு கொடுத்து, அதன்வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க வேண்டுமா அல்லது கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் முடிவு எடுக்க வேண்டுமா?



எப்போது யோசிப்பார் ? ஆர்.ஈஸ்வர், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுக்கு ஒரு முறை வருவது தான் பிறந்த நாள்; அதை ஆண்டு முழுதும் எவரும் கொண்டாட மாட்டார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்... கொண்டாடுகின்றனர்... கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்!


லண்டனில் ஒரு பாலம் உள்ளதாம்... அதன் ஒரு பக்கம் பெயின்ட் பூச துவங்கினால், மறுபக்கம் பூசி முடிப்பதற்குள் ஓர் ஆண்டு ஆகிவிடுமாம். அதனால், மறுபடியும் துவங்கிய இடத்திலிருந்து பெயின்ட் பூச துவங்கி விடுவராம். அதாவது, ஆண்டு முழுதும் அப்பாலத்தில் பெயின்ட் பூச்சு வேலை நடந்து கொண்டே இருக்குமாம்!

அதுபோன்று ஸ்டாலின்பிறந்த நாளும் அடுத்த ஆண்டு வரை தொடருமோ?

இந்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளையே, ஒரு நாளுக்கு மேல் கொண்டாடுவதில்லை. ஆனால், ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்ட வைபவங்கள்இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை; எப்போது முடிவுக்கு வரும் என்றும் தெரியவில்லை.

ஒவ்வொரு மாவட்ட செயலரும், பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்டாலினுக்கு செங்கோல் ஒன்று வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., கையில் செங்கோலை வைத்தபடி அரசவையில் வீற்றிருப்பார். அதுபோல், சட்டசபையில் கையில் இந்த செங்கோல்களை ஏந்தியபடி, ஸ்டாலின் ஆட்சி நடத்த போகிறாரா என்ன?

ஆட்சி கட்டிலில் அமர்ந்த நாள் முதல், அன்றாடம் ஒரு விழா நடத்தி, தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தி கொண்டிருக்கும் இவர், எப்போது தான் மக்கள் பிரச்னை குறித்து யோசிப்பார்?



மாற்றம் செய்வரா? தேவ்.பாண்டே, செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சியில், சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போதும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, முதல் நாளில் ஏதாவது ஒன்றை செய்வது கருணாநிதி வழக்கம். சட்டசபை நடவடிக்கை களை மக்கள் கூர்ந்து கவனித்து விடக் கூடாது என்பதற்காக செய்யப் படும் அரசியல் தந்திரம் இது!


'தந்தை எவ்வழியோ, தனயனும் அவ்வழி' என்பது போல், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முதல் நாள், தன் சமூக வலைதளத்தில், 'பட்ஜெட்' இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீடு, ₹க்கு பதிலாக, 'ரூ' என்ற எழுத்தை வெளியிட்டார், முதல்வர்.

அப்புறம் என்ன... அவர்கள் நினைத்தது போல் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. நிதி நிலை அறிக்கை மீதான காரசாரமான விவாதத்திற்கு பதில், இலச்சினை மாற்றிய விவகாரமே, தொலைக்காட்சிகளில் பெரிய அளவில்விவாதிக்கப்ட்டது.

தமிழக அரசு கடந்த ஆண்டு வரை தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், தற்போது புழக்கத்தில் உள்ள, ₹ குறியீடே இருந்து வந்த நிலையில், மத்திய அரசுடன்அனைத்து வகையிலும்மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் தி.மு.க., அரசு, இதிலும் மோதல் போக்கை கடைப்பிடித்துள்ளது.

'இது மோதல் அல்ல; தமிழுக்கு அளிக்கும் முன்னுரிமை' என்கின்றனர் தி.மு.க.,வினர்.

தமிழுக்கு முன்னுரிமை அளிப்பது உண்மையானால், தி.மு.க.,வினர் குவித்து வைத்திருக்கும் பணமூட்டைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில், ₹ குறியீட்டை அழித்து விட்டு, 'ரூ' என்று மாற்றலாமே!

செய்வரா?



மறைக்க முடியுமா?


என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே, விஞ்ஞான ஊழல், சர்க்காரியா கமிஷனுக்கு தண்ணீர் காட்டிய கட்சி என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊழல் செய்வதில் எட்டடி பாய்ந்தால், அவர் மகன் ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்.

அந்த அளவு திராவிடமாடல் ஆட்சியில் தோண்ட தோண்ட புதுப்புது ஊழல்கள்!

அது, மத்திய அரசு பார்வையில் விழ, தி.மு.க., வினர் மற்றும் அவர்கள் பினாமி நிறுவனங்கள் அமலாக்கத்துறை சோதனையால் திண்டாடுகின்றன.

வெள்ளை கொடி வேலைக்கு ஆகவில்லை போலும்... அதனால், உயிரைக் கொடுத்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, தி.மு.க.,!

மோடியை எதிர்த்து, 'இண்டியா' கூட்டணி அமைத்தார் தமிழக முதல்வர். அதில், மண்ணைக் கவ்வியது தான் மிச்சம்.

இன்று, தன் ஊழல் அமைச்சர்களை காக்க, தொகுதி மறுசீரமைப்பு எனும் பெயரில், இண்டியா கூட்டணியினர் ஆளும் மாநிலங்களின் உதவியை கேட்டு நிற்கிறார்.

அவர்கள் உதவியுடன், இந்திய மக்களை எல்லாம் திரட்டி, பிரதமர் மோடிக்கு எதிராக போராடப் போவதாக அபாய குரல் எழுப்புகிறார்.

டில்லி, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் மதுபான வழக்கில் சிக்கியது போல், தமிழகத்தில் தி.மு.க., சிக்கி விடுமோ என்ற அச்சம் அவரின் நிம்மதியை குலைக்க, 'ஹிந்தி எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு கதறிக் கொண்டிருக்கிறார், முதல்வர்!

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது தான், மதுபான ஊழலையும் மறைப்பது என்பதை ஏனோ மறந்து விட்டார்!









      Our Apps Available On




      Dinamalar

      Follow us