Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மம்தாவை பின்பற்றுவாரா ஸ்டாலின்?

மம்தாவை பின்பற்றுவாரா ஸ்டாலின்?

மம்தாவை பின்பற்றுவாரா ஸ்டாலின்?

மம்தாவை பின்பற்றுவாரா ஸ்டாலின்?

PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: நடைபாதை போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்தால், முதலில் அந்த வார்டு கவுன்சிலர் கைது செய்யப்படுவார் என, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால், சாதாரண மக்கள், பலவிதமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு பிரதான காரணம், நடைபாதை ஆக்கிரமிப்புகளே என, ஆய்வுகள் கூறுகின்றன. உள்ளூர் அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகளுக்கு தெரியாமல், எந்த ஆக்கிரமிப்பும் நடக்க முடியாது; உண்மையில் இவர்கள் தான் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்குகின்றனர்.

இனி எந்த பொது இடம் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அந்த பகுதியின் கவுன்சிலர், அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, மம்தா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதுபோல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதசாரிகளை காப்பாற்ற வேண்டும்.

சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள், வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், அயனாவரம் பகுதிகளில் உள்ள இரு பக்க நடைபாதைகளும், அங்குள்ள கடைக்காரர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

பாதசாரிகள் பெரிதும் அவதிக்குள்ளா கின்றனர். இதில் வயதானோர் தான், மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். உயிரை கையில் பிடித்தபடி நடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மே.வங்க முதல்வரை போன்று அதிரடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு செய்த பின் சிந்திக்கிறோமோ?


ஜி.ராமநாதன், திண்டுக்கலி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா சபாநாயகர் உத்தரவு வரவேற்கத்தக்கது.

வெள்ளைக்காரர்கள் ஏன், 'லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்' என்ற சபை நாகரிகத்தை வைத்தனர்... இதுபோல் தற்குறித்தனமாக உளரக் கூடாது என்பதற்காகத் தான்.

சபை நாகரிகம், நம் மேன்மையைக் காட்டும் அடையாளம். விவேகானந்தர், சிகாகோ மாநாட்டில், தன் தேசத்தின் பெருமையை, வீரமாகவும், அர்த்தம் உள்ளதாகவும், சபையில் உள்ள மற்ற அறிவுசார்ந்தவர்களுக்கு ஈர்ப்பு உள்ள வகையிலும் பேசியதால் தான், அந்தப் பேச்சை, கவுரவமாக உதாரணப்படுத்த முடிகிறது.

அதை விடுத்து, கண்ணியமான பார்லிமென்ட்டில், உறுப்பினர் பதவி ஏற்பை, தவறாக உளறி பதவி ஏற்பது, சபையின் மாண்பைக் காக்கத் தவறுவதற்கு ஈடானது.

கலர்பொடி வீசுவதற்கும், உறுப்பினர் பதவி ஏற்பில் அர்த்தமில்லாமல் உளறுவதற்கும், எந்த வேறுபாடும் இல்லை!

சில மாதங்களுக்கு முன் சபையில் கலர்பொடி வீசியவர்கள், குறுக்கு வழியில் அனுமதி பெற்று சபைக்குள் வந்தனர்; தற்போதைய உறுப்பினர்களோ, மக்களி டம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, சபைக்குள் வந்துள்ளனர்; அவ்வளவு தான் வித்தியாசம்.

இனி, சபாநாயகரின் பணி, சபை நாகரிகம் அற்ற விஷயங்களை, முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் நடந்து கொள்வதாகத் தான் இருக்கும்.

ராகுல் வகையறாக்கள், தற்போது மோடியை திட்டமிட்டு அவமானப்படுத்தி, அவருக்கு மனச்சோர்வை தருவது போன்ற ஒரு திட்டத்தை, 'வெயிட் அண்டு சீ' என்ற பாணியில் கையில் எடுத்துள்ளனர்.

தவறான பாதையில் மக்களுக்கு தவறான வழியை காட்டி கை தட்டல் பெற நினைக்கின்றனர்.

இந்தப் போக்கு, நம் நாட்டின் அரசியலுக்கு மிகப் பெரிய அளவில், தவறான பாதையை வழிவகுத்து, உலக நாடுகள் மத்தியில் நாட்டைக் கேவலப்படுத்தி விடும்.

மக்களாகிய நாம், தவறு செய்துவிட்டு சிந்திக்கத் துவங்குகிறோமோ என, எண்ணத் தோன்றுகிறது.

மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைகள்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், ரேஷன் கடைக்கு இந்த மாத ரேஷன் சாமான்கள் வாங்கி வரலாம் என்று சென்றிருந்தேன்.

துரதிருஷ்டவசமாக அன்று, 'பில்லிங் மெஷின்' வேலை செய்யவில்லை; 'இன்னொரு நாள் வாருங்கள்' என்று, கடைக்காரர் கூறிவிட்டார்.

அடுத்த நாள் சென்றேன்; அரிசியும், சர்க்கரையும் கொடுத்தனர். பருப்பும், பாமாயிலும் இருந்த போதிலும், 'அது போன மாதம் விட்டுப் போனவர்களுக்கு தான்.

இந்த மாதத்திற்கு உரிய ஸ்டாக் வந்த பின்பே உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் அடுத்த வாரம் வாருங்கள்' என்று கூறி விட்டனர்.

நானும் விடாது, அடுத்த வாரமும், பருப்பு, பாமாயில் வாங்க சென்றேன்; பாமாயில் மட்டுமே கிடைத்தது. 'இந்த மாதப் பருப்பு இன்னும் வரவில்லை, சில நாட்கள் கழித்து வாருங்கள்' என்று கூறிவிட்டார் கடைக்காரர்.

ஒரு மாத ரேஷன் சாமான்களை வாங்குவதற்கு, எத்தனை முறை அலைய விடுகின்றனர் பாருங்கள்.

இத்தனை முறை ரேஷன் கடைக்கு தொடர்ந்து செல்ல, யாரிடம் நேரம் இருக்கிறது? ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்கிறோம் என்கிற பெயரில், உபத்திரமாக மாறிவிட்டது சேவை. மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு பதிலாக, அவர்களின் வெறுப்பையே சம்பாதிக்கிறது அரசு.

ரேஷன் சாமான்கள் அல்லாத பிற பொருட்களும், உதாரணத்திற்கு டீத்துாள், உப்பு, மஞ்சள் பொடி, சோப் போன்றவைகளை வாங்கவும், மக்களை கட்டாயப் படுத்தப்படுகின்றனர். மாதம் பிறந்தவுடன், அவரவர்க்கு உரிய தரமான ரேஷன் பொருட்கள், ஒரே விசிட்டில், இன்னொரு முறை வரவழைக்காமல், கண்டிப்பாக, எந்தவித சாக்கு போக்கும் சொல்லாமல் வழங்கப்பட வேண்டும்.

அதுவே மக்கள் நலனுக்காக உழைக்கும், திறமையான நிர்வாகத்தின் அடையாளம். இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கஞ்சா கும்பலுக்கு கடிவாளம் எப்போது?


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானோர், சில நாட்களாக கையில் கத்தி, அரிவாளை ஏந்தி, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழக மாவட்டங்களில், கஞ்சா புழக்கம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இந்த பழக்கத்திற்கு அடிமையானோர், பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு துதி பாடுவதால், காவல் துறையும் அவர்கள் மீது கை வைக்க முடியாமல், கைகளை பிசைந்து கொண்டிருக்கிறது.

கஞ்சா போதை கும்பல் அட்டகாசத்தால், 10 - 15 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வந்தால் தான், நம் முதல்வரும், போலீசாரும் துயில் கலைந்து எழுவர் போலும்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us