PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: தமிழகத்தில் மணல் கொள்ளை எப்படி நடக்கிறது என, செய்திகள் வந்துள்ளன. 4,780 கோடி ரூபாய் அளவுக்கு, தமிழக மக்கள் வளம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், மாநில டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளனர். அரசுக்கு வருமானம் வராமல், இடையில் உள்ளவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை சாப்பிட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: அது சரி... 'குடி'யை கெடுக்கும், 'டாஸ்மாக்' சரக்குகளை மாநிலம் முழுக்க கடைகள் திறந்து விற்பனை பண்ற அரசாங்கத்தால, அதேபோல மணலையும் நியாயமான விலைக்கு மக்களுக்கு விற்பனை பண்ண முடியாதா என்ன...? ஆனா, ஆளுங்கட்சி புள்ளிகள் அமோக லாபம் அடையணும் என்பதால் தான், குவாரிகளை தனி நபர்களிடம் குடுத்து, 'கல்லா' கட்டுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யில் செயல்படும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி: பார்லிமென்டில் செங்கோலை வைக்கலாமா, கூடாதா என்று பேசும் சமாஜ்வாதி கட்சியினர், நலிவடைந்த, புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளில் பெரும்பாலும் மவுனம் காக்கின்றனர்.
டவுட் தனபாலு: புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மீது குற்றம், குறை சொல்ல எதுவும்சிக்கலை... அதனாலதான், போன வருஷம் பார்லிமென்ட்டுல வச்ச செங்கோலுக்கு இந்த வருஷம் எதிர்ப்பு தெரிவிச்சு, பிரச்னை பண்றாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வன்னியர்களுக்கான, 10.50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஆட்சியில் இருப்பவர்களிடம் கையேந்த வேண்டியுள்ளது. நம்மை ஆள்பவர்கள் அதிகபட்சமாக, 10,000 பேர் கூட இருக்க மாட்டர். நாம் அவர்களிடம் நம் உரிமைக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
டவுட் தனபாலு: நம்மை ஆள்பவர்கள், நம் சமுதாயத்தினரா தான் இருக்கணும்னு எல்லா சமுதாய மக்களும் நினைக்க ஆரம்பிச்சுட்டா, மக்களாட்சி என்ற தத்துவமே அடிபட்டு போயிடுமே... விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்காகவே, இந்த மாதிரி எல்லாம் டாக்டர் பேசுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!