PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை, பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அது போதாது. போதை பொருள் நடமாட்டம் என்பது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல; சமூக ஒழுங்கு பிரச்னை. எனவே, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மக்கள் நல்வாழ்வு, நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம் அறவே இல்லை; முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: பெருமளவுகட்டுப்படுத்தி தான், மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை சக்கை போடு போடுதா... போதை பொருட்கள் அறவே இல்லை என்ற நிலையை எட்ட, உங்க அதிகாரிகளும், போலீசாரும்இன்னும் உழைக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ரேஷன் கடைகளில் வழங்க, 20,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க முடிவு செய்துள்ள தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், கிலோவுக்கு 165 ரூபாய் விலை தர உள்ளது. இதன் சந்தை விலையே, 130 ரூபாய் தான். அதனால் தயக்கம் காட்டும் அதிகாரிகளுக்கு, அந்த விலைக்கே கனடா பருப்பு வாங்குமாறு, துறை மேல்மட்டத்தில் நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
டவுட் தனபாலு: சந்தை விலையே 130 ரூபாய் என்றாலும், மொத்தமா டன் கணக்கில் வாங்கினா, அதை விட குறைந்த விலைக்கு தருவாங்களே... அதை விட்டுட்டு, சந்தை விலையை விட கூடுதலாக, 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, மக்கள் வரிப்பணத்தை முழுங்க பார்க்கும் முதலைகள் செயல்பாடு, முதல்வரின் கவனத்துக்கு வரலையா என்ற, 'டவுட்' எழுதே!
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் எஸ்.யுவராஜ்: தமிழகத்தில் இருந்த 17க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 30 லட்சம் கட்டட தொழிலாளர்களும், மணல் லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மணல் குவாரிகளை திறக்க வேண்டும்.
டவுட் தனபாலு: மணல் குவாரிகள்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து, அமலாக்க துறை விசாரணை வரைக்கும் போனதால் தானே, அவற்றை மூடியிருக்காங்க... மணலுக்கு மாற்றாக, எம்.சாண்ட் போன்ற பொருட்கள் வந்துடுச்சே... இனியும், மணலை சுரண்டி, ஆற்றை பாழாக்கணுமா என்ற, 'டவுட்' வருதே!