PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM

'அடுத்த யாத்திரைக்கு தயாராகி விட்டார். லோக்சபா தேர்தலில் வெற்றி எங்களுக்குத் தான்...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி பெருமையுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
ராகுல், கடந்தாண்டு கன்னியாகுமரியில் துவங்கி, காஷ்மீர் வரை, 'பாரத ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் நடை பயணம் சென்றார். இதற்கு பின் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், அந்த கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.
'ராகுலின் யாத்திரை தான், இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது...' என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
ஆனாலும், சமீபத்தில் நடந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,விடம் வெற்றியை பறிகொடுத்தது காங்கிரஸ்.
இதனால் சோர்வடைந்துள்ள காங்., தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும், அடுத்த யாத்திரையை துவக்க திட்டமிட்டுள்ளார் ராகுல்.
இந்த முறை, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் துவங்கி, மொத்தம் 14 மாநிலங்களுக்கு, யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்; பெரும்பாலும், பஸ் யாத்திரையாகவே திட்டமிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த யாத்திரையை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ.,வினரோ, 'தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், எத்தனை யாத்திரை நடத்தினாலும், எங்களிடமிருந்து ஆட்சியை பறிக்க முடியாது...' என, திடமாக கூறுகின்றனர்.