PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

'சினிமாக்காரர்களுக்கும், இவருக்கும் அப்படி என்ன பகை...?' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள மக்கள்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா - 2 படத்தின் வெளியீட்டு விழா, சில மாதங்களுக்கு முன் ஹைதராபாதில் நடந்தபோது, தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
முன் அறிவிப்பின்றி, தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டதாக கூறி, அவரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
வழக்கமாக நம் நாட்டில் சினிமா நடிகர்கள் என்றால், அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் உண்டு. நடிகர்களுக்கு தொல்லை கொடுத்தால், அவர்கள் கட்சி துவங்கி நமக்கு நெருக்கடி கொடுப்பர் என, பயப்படுவர்.
ரேவந்த் ரெட்டி, அதை பற்றி கவலைப்படாமல் அல்லு அர்ஜுனை கைது செய்ய உத்தரவிட்டார். பின், அவர் ஜாமினில் வந்தார். இந்த களேபரம் அடங்குவதற்குள் அடுத்த ஏவுகணையை வீசியுள்ளார், ரேவந்த் ரெட்டி.
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததாக கூறி, பிரபலமான தெலுங்கு நட்சத்திரங்கள், 28 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒட்டுமொத்த திரையுலகமே ஆடிப் போயுள்ளது.
'சினிமாக்காரர்களால் நம் முதல்வர் ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால் தான், நடிகர்கள் மீது அவருக்கு இவ்வளவு வெறுப்பு...' என்கின்றனர், தெலுங்கானா மக்கள்.