PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

'ஒரு நல்லது, கெட்டதுக்கு போக முடியவில்லை; எப்படியாவது மோப்பம் பிடித்து விமர்சித்து விடுகின்றனர்...' என பொருமுகிறார், மேற்கு வங்க மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் திலீப் கோஷ்.
இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைப்பதற்கு மம்தாவும், ஆட்சியை பிடிப்பதற்கு பா.ஜ., தலைவர்களும் தீவிரமாக களம் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
'சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக, மம்தா பானர்ஜி தாஜா அரசியல் செய்கிறார்...' என, பா.ஜ.,வினர் விமர்சித்து வந்தனர். அவர்களது வாய்க்கு கடிவாளம் போடும் வகையில், மேற்கு வங்கத்தில் அரசு சார்பில் பிரமாண்டமான ஜெகன்நாதர் கோவிலை கட்டியுள்ளார், மம்தா.
இதன் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இதில், பா.ஜ., முன்னாள் தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். இந்த விஷயத்தை வைத்து, பா.ஜ.,வில் உள்ள திலீப் கோஷ் அதிருப்தியாளர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். 'திலீப் கோஷ் விரைவில் திரிணமுல் காங்கிரசில் சேரப் போகிறார்; இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது...' எனக் கூறி வருகின்றனர்.
இதனால் கடுப்பான திலீப் கோஷ், 'கோவில் கும்பாபிஷேகத்துக்கு போனதை வைத்து, என்னை துரோகி என விமர்சிக்கின்றனரே...' என, புலம்புகிறார்.