PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

'எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ; அப்போதெல்லாம், 'சிக்சர்' அடித்து விடுகிறார்...' என, கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி பெருமையுடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
கர்நாடகா காங்கிரசில் நடக்கும் கோஷ்டி பூசல் நாடு முழுதும் மிகவும் பிரசித்தம். முதல்வர் சித்தராமையா தலைமையில் ஒரு கோஷ்டியும், துணை முதல்வரும், மாநில காங்., தலைவருமான சிவகுமார் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.
சித்தராமையாவை கவிழ்த்து விட்டு முதல்வர் பதவியில் அமர்வதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார், சிவகுமார். ஆனாலும், அவரது முயற்சி இது வரை கைகூடவில்லை.
சமீப காலமாக சித்தராமையா மீதான வழக்குகள் இறுகி வருகின்றன. அரசு நிலத்தை, தன் மனைவி பெயரில் முறைகேடாக ஒதுக்கியதாக அவர் மீது வழக்கு உள்ளது. இதனால் சித்தராமையா மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அலை உருவாகும் என சிவகுமார் எதிர்பார்த்தார்.
இந்த நேரத்தில் தான், எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டது. இதை பயன்படுத்த நினைத்த சித்தராமையா, பெங்களூரில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பிரமாண்ட யாத்திரையை நடத்தி அனைவரையும் அசர வைத்தார்.
இதைப் பார்த்த சிவகுமார் ஆதரவாளர்கள், 'அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர் என்பதை சித்தராமையா அடிக்கடி நிரூபித்து வருகிறார். இவரை வேறு, 'ரூட்'டில் சென்று தான் கவிழ்க்க வேண்டும்...' என, தீவிரமாக யோசித்து வருகின்றனர்.