PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

'என் ஆட்சி காலத்துக்குள் எப்படியாவது இந்த கனவு திட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும்...' என, ஆவேசத்துடன் கூறுகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு.
கடந்த 2014ல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவானது. இதனால், தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் மாறியது.
அதன்பின் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவுக்கு மிக பிரமாண்டமான தலைநகரை வடிவமைக்க முடிவு செய்தார்; இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அமராவதியில் தலைநகரை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.
முதல் கட்ட பணிகள் முடிந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார்; அவர், தலைநகர் திட்டத்தை கிடப்பில் போட்டார்.
தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராகியுள்ள நிலையில், தன் கனவு திட்டத்தை நிறைவேற்ற சபதம் செய்து, அதற்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக, 67,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
உலக வங்கியிடம் கடன் பெறும் நடவடிக்கையும் துவங்கியுள்ளது. 30 மாதத்தில் பணிகளை முடித்து, ஆந்திர வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்பதே சந்திரபாபு நாயுடுவின் ஆசை.
'ரொம்பவும் பிடிவாதக்காரராக இருக்கிறார். கடன் வாங்கினாலும் பரவாயில்லை; நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதில் சந்திரபாபு உறுதியாக உள்ளார்...' என்கின்றனர், ஆந்திர மாநில அரசியல்வாதிகள்.