PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

'ஒரு வழியாக வெற்றி பெற்றாகி விட்டது. இந்த செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வது, அவரது சாமர்த்தியம்...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
பீஹாரின் மூத்த அரசியல்வாதியான லாலு பிரசாத், 76, முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். வயது மூப்பு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிஉள்ள அவர், தன் வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கி விட்டுள்ளார்.
அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும், மூத்த மகன் தேஜ் பிரதாப், எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளனர்.
இவர்களைப் போலவே, தன் மகள் மிசா பார்தியையும் அரசியல் களத்தில் இறக்கி விட்டார். ஆனால், 2014 மற்றும், 2019 லோக்சபா தேர்தல்களில் மிசா பார்தியால் வெற்றி பெற முடியவில்லை.
தேர்தல் களத்தில் போட்டி யிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்டால் தான், எதிர்கால அரசியலில் கோலோச்ச முடியும் என கருதி, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் களம் இறங்கினார், மிசா பார்தி.
அவரது இந்த விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. பீஹாரின் பெரும்பாலான தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வி அடைந்தாலும், பாடலிபுத்ராவில் மிசா பார்தி கரைசேர்ந்து விட்டார்.
'மிசா பார்தியின் இந்த வெற்றியால் லாலு குடும்பத்தில் பதவிச் சண்டை அதிகரிக்கும்...' என்கின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர்.