PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

'அவ்வளவு தான்... இனி இந்த கட்சி தேறாது...' என, ஒடிசாவில் நீண்ட காலம் ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
இங்கு மோகன் சரண் மாஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல்வாதி என பெயர் பெற்ற வர், நவீன் பட்நாயக். பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரான இவர், தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.
'நவீன் பட்நாயக்கிற்கு கண்ணுக்கு எட்டிய துாரம் வரை அரசியல் எதிரிகளே இல்லை. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மாற்று இல்லை...' என, பல ஆண்டுகளாக கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நவீன் பட்நாயக்கின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பா.ஜ., கட்சி. ஒடிசா மக்களே, இதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
நவீன் பட்நாயக்கிற்கு, 77 வயதாகிறது. உடல்நிலையும் சரியில்லை. அவரால் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த பிரசார கூட்டங்களில் இது வெட்ட வெளிச்சமானது.
இதனால், பா.ஜ., அரசுக்கு எதிராக, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக நவீன் பட்நாயக்கால் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும் என நவீன் பட்நாயக் நினைத்தாலும், அவரது உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே. அவரது அரசியல் வாழ்க்கை இனி கேள்விக்குறி தான்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.