Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம்பிறர் மனம் நோகாமல் பேசும் மகர ராசி அன்பர்களே!

இதுவரை ராகு 9-ம் இடமான கன்னி ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகள் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மீனத்தில் இருந்து இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றி பெற்றிருப்பீர்கள். இப்போது அவர் 2-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தருவது சிரமம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகலாம் என்பதால் கவனமாக இருக்கவும். ஆனாலும், தனித்து நின்று எதையும் துணிச்சலோடு சமாளிக்கும் நீங்கள் இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவீர்கள். ராகு-கேது இரண்டு கிரகமுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்களே என்று கவலை கொள்ள வேண்டாம். மற்ற கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். குருவின் 9-ம் இடத்துப்பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், குழந்தை பாக்கியத்தையும் தருவார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.

2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு கேதுவால் உங்களுக்கு பாதிப்பு தான் என்றாலும், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த காலத்தில் குரு மட்டுமின்றி , சனியும் நற்பலனை தரும் இடத்தில் உள்ளனர். இதனால் பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். கடந்த சில மாதங்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். ஆனால், குருவின் வக்கிர காலமான பிப்ரவரி முதல் ஜுன் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும்.

வியாபாரிகள் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் காணலாம். தொழில் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை மார்ச்சுக்குள் தொடங்கினால் நல்ல வளர்ச்சி அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எனினும் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். கவனக்குறைவு ஏற்பட்டால் மேற்கண்ட பலன்கள் கிடைப்பது அடிபட்டு விடும்.

கலைஞர்கள் தெம்புடன் காணப்படுவர்.

அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடந்த ஆண்டைவிட நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயத்தில் நெல், கோதுமை சோளம், மொச்சை மற்றும் மானாவாரி பயிர்கள் சிறப்பான மகசூல் தரும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.

பெண்கள் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.  2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வளர்ச்சி சீராக இருக்கும்.

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.

விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தட்டிபோகும். பக்கத்து நிலத்துகாரரிடம் அனுசரித்து போவது நல்லது.

பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

பரிகாரம்: ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம். மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள்.

செல்ல வேண்டிய தலம்:  மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us