Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கடகம்

கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது சாதகமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. மேலும் குருபகவான் அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.
குருபகவான் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தந்து மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஜூலை 7 முதல் நவ.13 வரை மனதில் தளர்ச்சி ஏற்படலாம்.

ஆறாமிடத்தில் இருப்பதால் சனிபகவான் நல்ல பணப்புழக்கத்தைக் கொடுப்பார். அமோக வாழ்வு அமையும். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். சனியின் 10ம் இடத்துப்பார்வை மூலம்  நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். டிச.26க்கு பிறகு அவரால் நற்பலன் தர முடியாது. சனி குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.

  ராகு பொருள் விரயம், துார தேச பயணத்தைக் கொடுப்பார். ஆக.31 க்கு பிறகு அவரால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஆக.31க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம். சிலருக்கு திருட்டு பயமும் ஏற்படலாம்.

பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பர். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். ஜூலை 7 முதல் நவ.13 வரை குடும்பத்தில் குழப்பம் வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இருப்பினும் குருவின் 9-ம் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பண வரவு இருக்கும்.  அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். ஜூலை 7க்கு பிறகு அக்கம் பக்கத்தாரிடம் வீண்பேச்சை தவிர்க்கவும். நவ.13க்கு பிறகு உறவினர் வகையில் இணக்கம் ஏற்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலம்  சிறப்படையும். மருத்துவ செலவு குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் வளர்ச்சி காண்பர். கணினித் தொழில், அச்சுத் தொழில், பத்திரிகை தொடர்பாக தொழில்கள்  சிறப்படையும். ஆக.31க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
* வியாபாரிகள் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் மூலம் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். இரும்பு வியாபாரம் அதிக வளர்ச்சி பெறும்.  வேலையின்றி இருப்பவர்கள் சுயதொழிலில் இறங்கலாம். நவ.13க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் திடீர் பணவரவு இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்
* தனியார் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். நவ.13க்கு பிறகு சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். எதிர்பார்த்த  கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* மருத்துவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். வேலையில் இருந்த வெறுப்பு மறையும்.
* வக்கீல்கள் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
* அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால் கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசியல்ரீதியான பயணம் வெற்றி பெறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.   
* பொதுநல சேவகர்கள் வசதியுடன் வாழ்வர். புகழ் வளர்முகமாக இருக்கும்.
* கலைஞர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் விதத்தில் ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும்
* விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பர். புதிய சொத்து வாங்கலாம். மஞ்சள், கரும்பு, எள், பனை, மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் உயரும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கால்நடை செல்வம் பெருகும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குரு சிறப்பாக இருப்பதால் படிப்பில் முன்னேறுவர். தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெறுவீர்கள். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் டிச.26க்கு பிறகு பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது.
* வியாபாரிகள் ஆக. 31க்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைக்கவும்.
* அரசு பணியாளர்களுக்கு டிச.26க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது.
* ஐ.டி., துறையினர் ஜூலை 7 முதல்  நவ. 13-ந் தேதி வரை அதிக வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சகஊழியர்களிடம் நிதானமுடன்  நடந்து கொள்ளவும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள்  ஆக. 31க்கு பிறகு எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம் கவனம்.
* கலைஞர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை  விடா முயற்சியோடு உழைக்க வேண்டியதிருக்கும். விருது, பாராட்டு  கிடைப்பதில் தாமதமாகும்.

  பரிகாரம்:   
* ஞாயிறு ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு
* சங்கடசதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us