Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

தனுசுபெரியோர்களிடம் நன்மதிப்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டி இருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.

கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான் 2015 டிசம்பர் 20-ந் தேதி 10-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொருள் நஷ்டத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில்  இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.

சனிபகவான் 2015 ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 2015 செப்டம்பர் 5-ந் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அங்கு அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். கடந்த காலத்தைவிட முன்னேற்றம்காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். ஆனால் சிற்சில தடைகளும் வரத்தான் செய்யும். அதை எளிதில் முறியடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மீதான பொல்லாப்பு மறைந்து, மதிப்பு, மரியாதை சிறப்படையும்.

குடும்பத்தில் வசதிகள் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்பு சீராக இருக்கும். அதேநேரம் ராகு சிறப்பாக இல்லாததால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் வளர்ச்சி அடைவர். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்லலாம். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சம்பள உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர்.

விவசாயிகள் சிறப்பான வருவாயை காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். நெல், கோதுமை, கடலை பயிர்கள் நல்ல மகசூல் தரும். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல  மகசூலைத் தரும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.

பெண்கள் உற்சாகமாகக் காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காணலாம். விருந்து, விழா என சென்று வரலாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.

பரிகாரம்:
பத்ரகாளிஅம்மனுக்கு தீபம் ஏற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழரை சனிகாலம் என்பதால், சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us