Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம்முற்போக்கு எண்ணமுடன் செயல்படும் மிதுனராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு பகவான் இதுவரை 3ம் இடமான சிம்மத்தில் இருந்தார். அங்கு அவர் பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம். முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் தற்போது குருபகவான் 3ம் இடத்தில் இருந்து 4ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது சற்று மாறுபடும். பொதுவாக குரு பகவான் 4ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். சனி பகவான் தற்போது 6ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இதன் மூலம் அவர் நல்ல பணப்புழக்கத்தைக் கொடுப்பார். புதிய முயற்சிகளில் வெற்றி அளிப்பார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் நாளுக்கு நாள் மேம்படும். மேலும் சனியின் 10ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், முயற்சியில் வெற்றியையும் தருவார். தொழில் வளர்ச்சியால் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். ராகு தற்போது 3ம் இடமான சிம்ம ராசியில் இருந்து செயல் திறத்தையும், செல்வ வளத்தையும் தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் மேம்படும். கேது 9ம் இடமான கும்பத்தில் இருப்பதால் அவ்வப் போது பொருள் இழப்பையும் ஏற்படுத்தலாம். மொத்தத்தில் எந்த ஒரு செயலையும் சனி, ராகுவால் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தடைகளை முறியடிக்கும் வலிமை காண்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே நேரம் ஆடம்பரச் செலவும் அதிகரிக்கும்.

சிக்கனம் தேவை. புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு என்றாலும், அதற்காக அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முக்கிய பொறுப்புகளை மனைவியின் ஆலோசனையின் பேரில் மேற்கொண்டால் வாழ்வில் பன்மடங்கு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் தாமதம் ஏற்படலாம். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை தேவை. சமயத்தில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். லேசான உடல் உபாதை என்றாலும் உடனே சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்; தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணப்படும். அலைச்சலும், பளுவும் இருக்கத் தான் செய்யும். சனி பகவானின் பலத்தால் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபத்தைக் காணலாம். வாடிக்கையாளர் மத்தியில்  நன்மதிப்பு உருவாகும். போட்டியாளர்களின் தொல்லை சற்று குறையும். அரசு வகையில் உதவி கிடைப்பது அரிது. அதே நேரம் தொழில் ரீதியான முயற்சிகளை மனைவி மூலம் மேற்கொள்வது நல்லது. சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணிச்சுமையால் சிலர் வீண்பிரச்னையைச் சந்திக்க நேரிடலாம். எனவே வேலையில் விழிப்புடன் இருக்கவும். உங்களின் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். நீங்களே செய்து முடிப்பது நல்லது. அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது அவசியம். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். எந்த காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டு விடும் முடிவுக்கு வர வேண்டாம். பொறுமையைக் கடைபிடித்தால் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்புண்டு.

கலைஞர்கள்: கலைஞர்களுக்கு தேவையான பணப்புழக்கம் இருக்கும். ஆனால் புதிய
ஒப்பந்தத்திற்காக விடா முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். சக பெண் கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது தான் என்றாலும் பணப்புழக்கத்தில் குறையேதும் இருக்காது.

மாணவர்கள்: மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் ஓரளவு பலன் பெற்றிருப்பீர்கள். தேர்விலும் முயற்சிக்கு தகுந்த மதிப்பெண் கிடைத்திருக்கும். ஆனால் வரும் கல்வி ஆண்டு சுமாரான பலனே கிடைக்கும். விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம்.
ஆசிரியர்கள் அறிவுரைகளைக் கேட்டு பின்பற்றுவது நல்லது. போட்டிகளில் அதிக சிரத்தை எடுத்தால் தான் வெற்றி காண முடியும்.

விவசாயிகள்:  விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ப பலனைக் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. மானவாரி பயிர்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். சிலர் விடாமுயற்சியால் புதிய சொத்து வாங்குவர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு வருமானம் காணலாம். கூலி வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வழக்கு, விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள்:  பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவர்.
உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், அதற்கேற்ப ஆதாயபலன் பெறுவர். தொழில் புரியும் பெண்களுக்கு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். சகோதரர்களின் உதவி
தக்க சமயத்தில் கிடைக்கும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு வியாழனன்று அர்ச்சனை செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்ரகாளி அம்மனை வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு துன்பம் தீர்க்கும். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us