Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம்குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட மகரராசி அன்பர்களே!

இதுவரை, குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அஷ்டம குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார்.

சிரமங்களைத் தருவார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில், குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்குசாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் . அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.  இந்த நிலையில் 2015 டிசம்பர் 20ல், குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது மிகவும் உகந்த நிலை. அங்கு சென்ற பின் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், சுபங்களையும் அள்ளித் தருவார். மேலும் அவரது 9-ம் இடத்துப்பார்வையாலும் நன்மை தருவார்.

சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் சில சிரமங்கள் வர வேண்டும் என்பது விதி. ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவானால் வரும் கெடுபலன்கள் குறையும்.  கேதுவால் நற்பலன்கள் அதிகமாகவே கிடைக்கும். எந்தச் செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும்.  ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.வீட்டுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி போகலாம். ஆனாலும், குருவின் பார்வையால் அதையும் முயற்சியின் பேரில் சாதிக்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

தொழிலதிபர்களும், வியாபாரிகளும்  எந்த தொழில் செய்தாலும் நல்ல வருமானம் பெறலாம். புதிய வியாபாரம் துவங்க யோகமுண்டு.  இரும்பு வியாபாரம்,  தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உருவாகும்.

பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம்.

கலைஞர்கள் விடா முயற்சிஉடன் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு கிடைப்பதில் தாமதமாகும்.

அரசியல்வாதிகள் வளமாகக் காணப்படுவர். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு போல் இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.

விவசாயத்தில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குதூகல நிலையில் இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியிருக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து எந்த வரவையும் எதிர்பார்க்க முடியாது. உடல் நலம் சிறப்படையும். மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும்.

பரிகாரம்: குரு சாதகமாக இல்லாததால் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us