ADDED : ஆக 26, 2011 09:56 AM

வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை 'பிரம்மஹத்தி விநாயகர்' என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவைக் கொல்வது, அதற்கடுத்தது பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவங்கள் தீராது. அவரது சந்ததிகளும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் இவர். இவரிடம் மன்னிப்பு கேட்டு, தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்ய வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தக் கோயில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து வேதாரண்யத்திற்கு நேரடி பஸ் உண்டு. இந்தக் கோயிலில் தான் நாவுக்கரசர் பாட மூடிக்கிடந்த கதவு திறந்தது. சம்பந்தர் பாட அந்தக் கதவு மூடிக்கொண்டது. புனிதமான இந்தக் கதவுக்கு வெள்ளிக் கவசம் சாத்தியுள்ளனர்.