Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தாலி காணிக்கை

தாலி காணிக்கை

தாலி காணிக்கை

தாலி காணிக்கை

ADDED : நவ 21, 2019 02:15 PM


Google News
Latest Tamil News
நீண்ட நாளாக திருமணம் நடக்காத பெண்களும், உடல்நிலை சரியில்லாத கணவர் உயிர் பிழைக்கவும் தாலியை காணிக்கையாக அளிக்கும் வழிபாடு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடக்கிறது.

படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு ஒருமுறை கர்வம் ஏற்பட்டது. தன்னால் தான் உலகமே இயங்குகிறது என நினைத்தார். இவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் முடிவெடுத்தார். தேவலோக பசுவான காமதேனுவிடம் ''நீ பூலோகத்திலுள்ள வஞ்சி வனத்திற்கு சென்று சிவபூஜை செய். அதன் பலனாக பரிசு ஒன்றைத் தருவேன்'' என்றார். வஞ்சி வனத்தில் காமதேனு தவத்தில் ஈடுபட்டது.

அங்குள்ள புற்று ஒன்றில் சுயம்புலிங்கம் (தானாக தோன்றியது) மறைந்திருந்தது. அதன் மீது காமதேனு தினமும் பால் சொரிந்தது. ஒருநாள் தவறுதலாக அதன் குளம்படி பட்டு லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. நடுங்கிப் போன காமதேனு மன்னிப்பு கேட்க, அந்த லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டார் சிவன். ''நான் உனக்கு வாக்களித்தபடி பரிசு தருகிறேன். உயிர்கள் பிறக்க ஆதாரமான கருவை நீயும் இன்று முதல் உற்பத்தி செய்வாய். பிரம்மாவைப் போல் நீயும் இன்னொரு படைப்புக்கடவுள்'' என்றார். காமதேனு மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டது. தனக்கு போட்டியாக ஒருவர் வந்தவுடன் பிரம்மாவின் கர்வம் அழிந்தது.

காமதேனு கருவைப் படைத்த இடம் என்பதால் வஞ்சிவனம் 'கருவூர்' எனப் பெயர் பெற்று, பின் கரூர் என மாறியது. லிங்கம் இருந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் எழுந்தது. பசு வழிபட்ட சிவன் என்பதாலும், திருமண பாக்கியம் தருவதாலும் சுவாமிக்கு 'கல்யாண பசுபதீஸ்வரர்' என பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அலங்காரவல்லியம்மனுக்கு சன்னதி எழுப்பப்பட்டது.

திருமணத்தடையுள்ள பெண்கள், மணமான ஒரு மாதத்துக்குள் கணவர் தங்களுக்கு கட்டிய தாலியை இங்கு காணிக்கையாக அளிக்கின்றனர். இதே போல நோய், விபத்தால் உயிருக்கு போராடும் கணவரைக் காக்கவும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 83 கி.மீ.,

விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மார்கழி பிரம்மோற்ஸவம் 13 நாட்கள், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04324 - 262 010

அருகிலுள்ள தலம்: கடம்பவனேஸ்வரர் கோயில் (35 கி.மீ.,)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us