Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நெஞ்சினிலே...

நெஞ்சினிலே...

நெஞ்சினிலே...

நெஞ்சினிலே...

ADDED : மார் 22, 2024 09:56 AM


Google News
Latest Tamil News
ஐயப்பன் சிலை மனித வடிவில் இருப்பதை கோயில்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் வெள்ளித்தடி வடிவில் அவரைக் காண விரும்பினால் கேரளா எர்ணாகுளம் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகை கோயிலுக்கு வாருங்கள். கவலை தீர்க்கும் இவரை ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திரத்தன்று ஒரு நிமிடம் நினைத்தாலும் போதும்.

ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தளராஜா. இவருக்கு உதயணன் என்னும் திருடனால் தொந்தரவு இருந்தது. ஐயப்பன் அவனுடன் போரிடச் சென்றார். அம்பலப்புழா, ஆலங்காட்டு மன்னர்கள் உதவியாக உடன் சென்றனர். அன்று முதல் இந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஐயப்பனின் நண்பர்களாக மாறினர். பூலோகத்தில் ஐயப்பன் தன் கடமை நிறைவேறியதும் சபரிமலையில் கோயில் கொள்ள முடிவெடுத்தார். இதற்காக எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி நண்பர்களிடம் தெரிவித்தார். அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் பாதையை சீரமைக்க துணை நின்றனர். இதுவே 'பெரிய பாதை' எனப்படுகிறது. இதன் பிறகு ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர்.

அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சிலையில் ஐயப்பன் ஜோதி வடிவில் ஐக்கியமாகினார். அம்பாடத்து மாளிகை குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று வந்தார். முதுமை ஏற்பட்ட பிறகு சபரிமலைக்குச் செல்லும் வழியில் ஒருமுறை அந்தணர் ஒருவரைச் சந்தித்தார். வெள்ளிமுத்திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை, கல் ஆகியவற்றை ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஐயப்பனை தரிசித்து விட்டு கேசவன் ஊர் திரும்பும் போது மீண்டும் சந்தித்தார்.

''நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்தால் நன்மை அடைவீர்கள்'' என்று சொல்லி மறைந்தார். அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் அந்தணராக வந்தவர் ஐயப்பனே என்பதை உணர்ந்து கோயில் கட்டினர். கருவறையில் இப்பொருட்களே 'சாஸ்தாவாக' கருதப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. நோய், கவலை தீர பக்தர்கள் வழிபட்டு பலனடைகின்றனர்.

எப்படி செல்வது: எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ., துாரத்தில் காலடி. அங்கிருந்து 3 கி.மீ.,

விசேஷ நாள்: மகரஜோதி தரிசனம், பங்குனி உத்திரம்.

நேரம்: சபரிமலை நடை திறக்கும் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.

அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0484 - 228 4167

அருகிலுள்ள தலம்: காலடி கிருஷ்ணர் கோயில் 3 கி.மீ.,(குழந்தை வரம் பெற...)

நேரம் அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 93888 62321





      Our Apps Available On




      Dinamalar

      Follow us